Pages

Sunday, October 1, 2023

மூக்கன் சரிதம்

<செம்மையுறாத பிரதியிலிருந்து>




திரிசிரபுரம் - பால்வீதியின் நுண்மைக் கண்களால் அளந்து வைக்கப்படாத அதன் வரகனேரிபாளையம் தூமைக் குடிசைப்புறமென்று அழைக்கப்பட்ட வாழ்நிலத்தின் மண்பரப்பில் அமர்ந்து கற்கள் எறியும் குரங்கின் மீது தடிகொண்டு தாக்கியவர்களின் வீச்சில் இரத்தம் சீறிப் பாய்ந்த அகோர கதை - இதுகாறும் வெறும் கதையொன்றை, அவள் தன் கைகளோடு மார்பகங்களையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டதினை அவதானித்தவர்களை கண்ணுற்றபொழுது எதிர்புற வண்ணச் சுவரில் வங்கியின் வட்டிசார் விளம்பரத்தில் மரத்தின் கிளைகளில் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் வால் விலங்குகளில் ஒன்றின் மீது சிகப்பு வர்ணத்தில் ஆடை போர்த்தியபடி வரையப்பட்டிருந்த கதையென்ற அனுபவத்திலிருந்து அவனை தூக்கி எறிந்த ஒரு ஓவியத்தை யதேச்சையாகப் பார்த்தவனின் நினைவென்னும் மென்னுடலின் மேல் கத்தி வைத்து இழுத்த உணர்வெழுந்தது.

மேலும் கீழும், கிடைமட்டமாகவும், சகல இடங்களிலும் அரை மணிநேரமாக அந்த விளம்பரத்தைப் பார்த்தவன் ஓவியத்தின் வலது/இடது ஓரங்களில் கிறுக்கலான கையெழுத்து அல்லது அப்படி வேறு ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். காண்பதற்கரிய தொல்சிற்பமொன்றைக் கண்டதைப்போல இருந்தது அவனுக்கு. நான்கைந்து குரங்குகளில் சிகப்புநிற துவாலையால் போர்த்தப்பட்டதைப் பார்க்கும் நிமிட கால வரையறையில் மனதில் இருந்த பதற்றம் நீர்க்குடுவையில் செலுத்தப்பட்ட இராசயனத்தைப்போல உடலெங்கும் ஊர்ந்து பரவுவதை கைகளில் ஏற்பட்ட பெரும் நடுக்கம் அவனுக்கு உணர்த்தியது. 

பல கோணங்களில் ஒரு முப்பது நாற்பது முறை தன் ஆடம்பர அலைபேசியில் ஒளிப்பழத்தை விடுவித்தும், இயக்கியும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினான். புகைப்படமெடுக்கும் சமயம் கைகளும், அவனுமாய் சாமியாட்டம் ஆடியதைக் கண்டவர்கள் என்றுமில்லாத அவனுடைய ஒவ்வொரு செய்கையையும் மந்திரத்தால் சாகசங்கள் செய்பவனைப் பார்க்கும் பார்வையாளர்களைப் போல விநோதமாகவும், இயல்பின்மையின் கோடியில் தாங்களும் ஒருவராய் சேர்ந்துவிட்ட கதையால் அதிசயப்பட்டுப் போனவர்களுமானார்கள்.

இவ்வுலக உணர்விற்கு வர அவகாசம் பிடித்த அவன் உள்ளுணர்வை குறை கூறினான். விரைவாக அந்த இடத்திலிருந்து கிளம்பி வார விடுப்பு பெற்று அவன் வழக்கமாகப் பயணம் செய்யும் குளிரூட்டப்பட்ட பேருந்துக்காக காத்திராமல் அரசுப் பேருந்தொன்றில் ஊருக்குப் புறப்பட்டான். அலுவலகத்திலிருந்து நேராக விடுதிக்குச் செல்லவில்லை. விடுதியில் உடன் தங்கியிருக்கும் நண்பர்களிடம் கூட சரி, ஊரிலிருக்கும் அம்மையப்பனிடமும் தான் வருவதாய் எந்தவொரு தகவலும் சொல்லவில்லை. அவசரமிகுதியில் என்ன செய்வதென்று அறியாதவனைப் போல, யாரோ நெருங்கிய உறவினரொருவர் தவறிவிட்டதைப் போல இருந்தது அவன் அலுவலகத்திலிருந்து அன்று கிளம்பிச் சென்றது. 

திரிசிரபுரம் - திருச்சினாபோலியாகி பின் திருச்சிராப்பள்ளியென்ற பெயர்பெற்று - இன்று திருச்சியாகச் சுருங்கிய கதை வரை ஒருவேளை இதுவும் அதுபோல முடியாத கதையாக நீளும் ஒரு மர்மத்தைக் கண்டறிந்த தருணமே பேருந்துப்பயணம் முழுவதும் அவனை ஆக்கிரமித்து ஊரடைய வழி செய்தது. பேருந்திலிருந்து இறங்கியதும் வீடடையவில்லை. யாரை அவன் சந்திக்க வேண்டி கிளம்பினானோ அவன் முகம் மாலை வெயிலின் நித்திய ஒளியில் வெளிக்கிளம்பும் நிறைமதியினைப் போல் வழியில் பட்டது.

ரகசியம் தாங்கிய கண்களில் சிரித்தான்,  வருகைப் பதிவெட்டுக்காக இருப்பை அறிவிப்பதைப் போல வலது கை உயர்ந்தது ஐயப்பனை நோக்கி.

நீண்ட நாட்களுக்குப் பிறகான பாரம்பரிய விசாரிப்புகள் ஏதுமில்லாமல் நெருங்கி சாதாரணமான குரலில்,

"நான் மூக்கனைப் பார்த்தேன்" என்றான்.

வியப்பின் நிழல் பட்ட கணம் ஐயப்பனின் மனமெங்கும் சூடேறின. திகைப்பென்பதும் கூட பேயைக் கண்ட பயமாகி அவனைச் சூழ்ந்தது. அந்த பயம் அவன் முகத்திலும் படர்ந்தது. அப்பொழுது அவர்களிருவரும் ஆசுவாசமடைய குறைந்தபட்சம் ஒரு தேநீர் அத்தியாவசியமாகிப்போனது.

***

காலஞ்சென்ற கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் வரகனேரி பகுதியில் தங்கி எடுபுடி வேலை மட்டுமே செய்யக்கூடிய மூக்கனை சந்தித்தும், அவனிடமிருந்து பெற்ற சில தகவல்களின் அடிப்படையிலும் பழமையுள்ள கொத்தாலத்தான் கோவிலின் தம்படி உருப்படியில்லாத காப்பு கட்டும் உரிமையை அவனுக்கு இந்த முறை பெற்றுத் தருவதாகவும் நம்பிக்கையளித்திருந்தார்.

அதன்படி தன் சகல பரிவாரங்களுடன் அவரை சந்திக்க பெரிய சௌராஷ்ட்ர தெருவின் எல்லைக்கு வந்த சேதி கேட்டு மளிகைக் கடை இரத்தின பிள்ளை, ஐயாவின் தயவின்றி என்னால் யாரையும் அனுமதிக்க இயலாதென்றும், மீறி தெருபுகுந்தால் அத்தனை உயிர்களுக்கும் அவர்களே சாட்சியென்றும் சொல்ல மூக்கன் மௌனமாக அனைவரையும் திரும்ப அழைத்தான்.

பணிந்து செல்ல மூக்கன் சாதுவானவனல்ல. கடும் முரடன். வரகனேரி சண்டியன். கண்ணன், சந்திரனாகிய இரட்டையர்களுக்கு பாரிய காலமாய் சிறந்த அடியாளாக இருந்தவன். முன்யோசனையின்றி கை அகட்டுபவன். தேர்ந்த குடியன். உள்ளூர் கிழத்திகள்கூட சாதி வேறுபாடு கடைபிடிப்பதால், நாட்டியமாடும் விராலிமலை பார்ப்பன யுவதிகள் உடல்களுக்குள் ஆழப்பாய்ந்தவன்.

மதுர வெட்டவெளியின் அகன்ற பரப்பில் ஓரமாய் அமர்ந்து சூதாடும் குழுவினரின் புறக்கணிப்பை அர்த்தமுள்ள வசைகளால் கடக்கும் மூக்கன் வரகனேரியின் உயர்குலத்தோர் மட்டுமல்லாது யாவரிடத்திலும் மதிப்பு பெறவில்லை.

மூக்கனிடத்தில் கி.ஆ.பெ.வின் வருகையே பணிந்து செல்ல வைத்தது என்று சொல்லலாம். பகுக்கப்பட்ட சமூகத்தில் அவனை அங்கீகரித்த ஒரே மனிதர் அவர்.

எந்த பகுதியிலிருந்து, எப்பொழுது இங்கு வந்து குடியானவர்கள் என்று மூக்கன் சாதியினரை கண்டறிவது கடினம். பாளையத்துமார் தன் சொந்த சேவைக்காக இருப்பதில் கடைநிலையான அடிமையாகக் கூட விலைபோகாத சிலரை சுத்தமான பகுதியிலிருந்து ஒதுங்கிய வரகனேரிக்கு அழைத்து வந்து குடியும், கூழும் கொடுத்ததாக சொல்கிறார்கள். சௌராஷ்டிரர்கள் முதல் வந்தேறிய லம்பாடிகள் வரை தீர்க்கமான வரலாறுண்டு, மூக்கன் குழுவிற்கு தெளிவாக வரலாற்று புலத்தில் நிச்சயமான தகவல்கள் யாதுமில்லை. அங்கொன்றுமிங்கொன்றுமாய் பிட்டு வைத்த கதைகளே அவர்களது பரம்பரை வரலாறாக பேசப்படுகின்றது.

ஒல்லியான, கூர்மிக்க சிறிய மீனின் முள்ளைப் போன்றதொரு பசைஊசியை மூக்கில் அணிந்திருக்கிறார்கள் என்பதால் மூக்கர்கள் என்றும், ஆண்கள் என்றால் மூக்கா, பெண்கள் மூக்கி போன்ற ஒட்டுப் பெயரைத் தாங்கியும் இருப்பதிலிருந்து பழங்குடி இனத்தின் சாயல்கள் மூக்கர்களிடத்தில் ஒளிந்திருப்பதாக இவர்களை ஆராய்ந்த சில மானிடவியல் அறிஞர்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.

சமூகத்தில் யாதொரு படிநிலையிலும் இல்லாத ஒரு அரூப சமூகம் திருச்சி வரகனேரியில் எந்த பணியிட்டாலும் செய்து எத்தனை குறைவான கூலிக்கும் தலையாட்டி வீச்சமடித்து குப்பையிலெறிவதையும் முந்தானையில் வாங்கி ஆதி விலங்கினங்களைப் போல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இவர்களிடத்திலிருந்து திமிறி தினவடையும் சரண்கொள்ளாத பச்சைப்பூஞ்சானாய் ஏறி நகரும் குணம் பெற்ற ஒருவன் மூக்கன். அவனை விட ஒரு பிரம்மாண்டத்தின் அதிரகசிய பிறவியான சில நேரங்களில் ஆத்திரமாகவும், பல நேரங்களில் அரவணைத்தும் அவன் பழகி வளர்த்த குரங்கு. ஊரிலுள்ளோர் மற்ற பிறரும் அதே சாதிக்காரரும் மூக்கன் குரங்கென்றே அழைத்து வந்தனர்.

கி.ஆ.பெ. தலையிட்ட நியாயமாதலால் புனித உயர்குலத்தார் எதுவும் சொல்லவோ மாற்றவோ இயலாமல் போனாலும் மூக்கன் சாதியின் பாரம்பரியத்தை மிக இழிவான கதைகள் மூலம் கட்டமைத்தனர். அதன் பேரால் ஓரிரு சுகவிரும்பிகள்கூட எதிர்நிலையில் பயணப்பட வேண்டியிருந்தது. இவையாவும் மூக்கன் வளர்த்த குரங்கிற்கு புரியாத ஒன்றில்லை என்பதே இங்கு அதிசயமும், புதுமையும்.

மூக்கனுக்கு போத்தல் சாராயம் முதல் சிப்பி பீடிக்கட்டு வரை வாங்கி வந்து தருவது மூக்கன் குரங்கின் காரியம். காய்ச்சலுக்கு வெந்நீர் கூட வைத்து தரும் குரங்கு மூக்கனைப் போலவே இச்சமூகத்தினாலும் இட்ட பணிகளை செய்து வந்தது. மூக்கனோடே வாழ்வதால் குரங்கையும் அவன் மூக்கா என்றே அழைத்தான்.

அவன் அதட்டக்கூடிய கோபம் வந்தால் விளாசக்கூடிய ஒரே ஜீவன் அந்த குரங்கு மட்டுமே. ஒருமுறை மூக்கன் குரங்கு கொண்டு வந்த கறியில் உப்பில்லை என்ற வெறியில் கடும் போதையுடன் குரங்கை அடித்து மிதித்தான். உடல் வலிக்க குரங்கு துடித்தது, தவழ்ந்து சென்று மீதமுள்ள சாராயத்தை உறிஞ்சி தள்ளாட்டம் போட்டு வெளியில் ஓடிப்போனது.

ஒருவகையில் குரங்கு போதையை அனுபவிக்க கற்றுக்கொண்டதுகூட மூக்கனின் பொறுமையின்மையால் இருக்கலாம். ஆனால் அதையே சில நாட்களில் பழக்கப்படுத்திக் கொண்டு சரிசமமாக வாழத் தொடங்கியது.

மூக்கனைப் பொறுத்தவரை மனிதனைப் போன்றது அக்குரங்கு. அவனும் குரங்கும் இரட்டைச் சகோதரர்கள் என்பதே மக்களின் கருத்து.

நிலவின் தேய்ந்த ஒளியில் துரைசாமியின் மருமகளுக்கு வயிற்றில் வலி பீடித்ததும் மூக்கன் குரங்கின் தயவால் மருத்துவச்சி விஜயம் செய்தாள். அவள் வாய் திறக்கவில்லை. அடிமட்ட சாதியின் ஏவல்களை கவனிக்கும் மனிதப்பிறவியில்லாத ஒரு குரங்கின் மேன்மையை சொல்வதென்பது அவளைப் பொறுத்தவரை கௌரவமற்ற செயல். ஊரின் பல நல்ல/கெட்ட காரியங்களுக்குப் பின்னிருக்கும் மூக்கன் குரங்கு தீட்டுப்பட்ட சீவனை விட கீழ்நிலையில் வைத்து பார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. தவிர்த்து ஊரார் பழக மறுக்கும் மூக்கனிடமும் அவன் சமூகத்தாரிடமும் அன்பாக நெருங்கி இருந்தவர்களுள் பாஸ்கர பண்டிதரும் ஒருவர். சௌராஷ்ட்ர தெரு குடும்பங்களுக்கு சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்கும் ஒரே நல்ல மனிதர் பாரம்பரியமாய் புழங்கிவரும் உறவுமுறைகளின் மேல் நம்பிக்கையிழந்து மூக்கன் சமூகத்தவரை முதன்முதலாய் தெருவிசயம் செய்ய வைத்தார். முகத்துக்கு முகம் பேசாத சொற்களை பின்புறமாக துப்பினார்கள் அவருடைய பூர்வ விசுவாசிகள்.

மூக்கன் வகுப்பினரின் சடங்குகளையும் முன்னின்று நடத்தியவர் அக்காலத்தில் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு இனத்தவர்களிடையே காழ்ப்பையும், பாராட்டையும் ஒருங்கே பெற்றார். கிறித்துவ மிஷனரியைப் போல மூக்கன் சமூகத்தவரும் அனைத்து வழிகளிலும் சம பாகம் கொடுத்தார். கி.ஆ.பெ. அவருக்கு பக்கபலம்.

இத்தோடு நில்லாமல் மூக்கன் சமூகம் மட்டுமின்றி யாருமே எதிர்பார்க்காத மலைக்கோட்டை சன்னதியின் நுழைவு வாசலில் அவர்களுக்கு சிறப்பு வழிபாடு மட்டுமின்றி சாஸ்திரிகளின் மூலம் அர்ச்சனை ஏற்பாடுகளுக்கும் தயார்படுத்தியது அனைவரையும் உலுக்கியது. கும்பலாக திரள ஆரம்பித்தார்கள். தீவெட்டியுடன் நாலாம் திசையிலும் சங்கங்கள் கூடின. பாஸ்கர பண்டிதரை கடுமையாகப் பழிவாங்கவும், மூக்கன் சமூகத்தவருக்கு தண்டனையாக வரிப்பொருட்களை விதிப்பதையும் குறித்து யோசித்தனர்.

பாஸ்கர பண்டிதர் எதற்கும் அசையவில்லை. அவரை அவர்களுடைய வாழ்நாட்களின் இறுதிவரை நினைத்த எதையும் சாத்தியப்படுத்த முடியாமல் போனது.

இவருடைய நெருங்கிய நட்பாக மூக்கனும் அவனுடைய செல்ல மிருகமும் சுற்றி சுற்றி வந்தனர். மூக்கன் மட்டுமின்றி அவன் சாதிக்காரர்கள் அனைவரும் ஓரளவுக்கு திசை மாறி மனித ஏற்றம் பெற்றதில் பாஸ்கர பண்டிதருக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் பெரியவருக்கு அளப்பரிய பங்கு உண்டு.

Sunday, August 6, 2023

நீலகேசியின் மறு உரையாடல்/சொற்களற்ற நூல்கள்....


அகசூனியத்தில்
ஸ்தூல வெளியின் கருமைப்பரப்பில்  மிதக்கும் நீலகேசி வனதியின் அரூப
பிம்பங்கள் சகிதமாக
ஓர் உன்மத்த சாயை - தாண்டவராயன்

இதுகாறும் காணக் கிடைக்கும் பத்திகள் சாராம்சமிக்க பிராரம்ப உசாவல்களாகவும், பாரம்பரிய சடங்கு வழியில் செய்யப்பட்ட கடன் தீர்க்கும் முறையிலும் தேங்கி நிற்கின்றன.  கேட்ட குரலையே மீளச் சொல்லும் பாங்கிலிருந்து விலகி மாற்று ஏற்பாடு செய்ய ஆசிரியரே முன் வருவது எத்தனை அபத்தம். ஒரு மொழியில் முயற்சிக்கப்பட்ட பிரதி தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்வது அசாத்தியமான காரியம் என்ற சிந்தனையே அவலமானது, மேலும் ஒட்டுமொத்த கதாவாசக கும்பல்களிலிருந்து ஒரு விந்து முதற்பிரதியின் பாற்பட்ட ஸ்நேகத்தாலும் (ஒருவேளை பரிதாபத்தாலும் கூட) அதை அண்டி அன்போடு அணுகுவதென்பது போற்றத்தக்கதல்ல.

இப்போற்றத்தக்க நிலையிலிருந்துகொண்டுதான் ஒரு பிரதியை ஏற்றுக்கொள்வதை நீலகேசியும் முயல்கிறாள். நீலகேசி சிங்கள இனவாதம் தோன்றவியலாமலிருக்க எந்த சிரத்தையும் மேற்கொள்ளாத பௌத்தத்தை அன்றே மறுத்துவிட்டு சமணத்தை அங்கீகரித்தவள். அவள் வழிவந்த இவளும் சாமானிய வாசகி. அவள் அர்த்தங்களுக்கொப்ப சில வாசிப்புச் சாத்தியங்களை இப்புதிய பிரதிக்கு அளிக்க விரும்பினாள்.

நீலகேசியின் உசாவற்படி ஆயிரமாம் ஆயிரம் வருடங்களாய் அழிவின்றி இடைவிடாது ஓரிடத்திலிருந்து கிளம்பி அலைந்து பிரிவுற்று இறுதியில் கடல்புகும் நதியின் பரந்த அசைவைப் போன்ற இவ்வுலகக் கதைப்பரப்பில் எங்கோ நடுவில் ஓரிடத்திலிந்து இழுத்து எடுக்கப்பட்ட கதைத்தொகுப்புகள் சர்க்கங்களாய் விரிந்ததாகவும், பிரம்மாண்டப் பெருவெளியின் மூலையொன்றிலிருந்து பிரித்து உருவப்பட்ட சொற்களின் தொடர் சேர்க்கை இப்பிரதியின் பகுதிகளாய் மாறிப்போனதாகவும் சொல்லப்பட்ட இப்புதிய பிரதி ஓர் அர்த்தமற்ற பித்தத்தனத்தில் தனக்கேதனக்காய் பேசியவளின் செய்கைகளைக் கண்ணுற்றவர்கள் அவள் இடையின்றி மேலும் பேசுவதற்காக காத்திருந்தனர்.

அவசியமேயில்லாமல் பல இடங்களில் ஆசிரியப்பிரசன்னம் நிகழ்வதாக அவன் குறைபட்டுக்கொள்ள நீலகேசியோ அவன் ஊடுருவலின் முக்கியத்துவம் குறித்துப் பேசலானாள். 

புரட்சி என்ற சொல்லையே நீக்கியவள் எலினார் என்பதை வரலாற்றின் கடைசி வாசகனுக்குக் கடத்திவிட நினைப்பதும், தத்ரூபத்தின் முதிர்ச்சியின்மையைப் புரிய வைப்பதும் சாத்தியமாகாத ஒன்று. அதற்கு இப்பிரதியையும் தொழிலாக வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர ஊடறுத்தல் ஒருவித குறைபாடு என்ற மனோநிலை குறிப்பிட்ட இடத்தில் பொருந்தி வராது.

ஆமோதிப்போரின் நடுவில் உருவான வெற்றிடம் தன் காய்ந்து போகாத ஒற்றைப் பரிமாணமிழந்த சுயகேள்வியின் வெளிப்பாடாகும் என்பது நீலகேசியின் நம்பிக்கை. அவள் சலசலப்பான பேச்சுத்தொகைகளுக்கு சோரம் போகாத திண்ண உரையாடல்களை செறிவாக்குவதில் பயிற்சி செய்பவள். ஒரு சகவிந்து பார்ப்பனீய அம்சங்களின் முதன்மையை பூடகப்படுத்துவதை எதிர்கதையாடல் என்ற புரிதலின் சாரத்தை படர்த்துவதன் மூலம் ஆசிரியனற்ற பிரதி செயல்படும் சாரத்தை விளக்கினாள்.

ஒரு கண்ணாடியைப் போல
எதிர் எதிராக
இருவேறுபட்ட
எதிர்வுகளின்
நித்தியம் 
தாண்டவராயன், ஓர் எதிர் கதையாடல்


துயிலார் X நித்திரவார்:

துயிலார் இனத்தின் வேர் குடுகுடுப்பை சமூகம். ஒன்பது கம்பளத்தார்களில் "நித்திரவார்" குழு மட்டுமே குடுகுடுப்பைத் தொழிலில் ஈடுபடும்.

தொல்கதைகளின்படி "நித்திரவார்" என்பது உறக்கத்தினால் ஏற்பட்ட ஒரு பெயர்.  புலாலில் வலு பிரசித்தம் பெற்ற மாட்டிறைச்சியை மறுக்கிறார்கள் இவர்கள்.  தாழ்த்தப்பட்ட குழுக்களோடு பிற சமூகக்குழுக்களின் உறவெப்படியோ அதிலொரு எள்ளும் வேற்றுமையற்ற உறவு. சுருக்கமாக போலச்செய்தலின் உதாரண குழுக்களில் ஒன்றே நித்திரவாரும்.

பிரதியின் சூட்சுமம் இக்குறிப்பிட்ட தளத்தில் வெளிப்பட்டுவிடும் என்ற அர்த்தத்தில் நீலகேசி மேலும் எழுதியதாவது:

துயிலார் திரும்பச்செய்தல், போலச்செய்தலுக்குள் வரையறுக்கப்படாது தனித்திருக்கும் இனம். அவர்களின் முதற்பணியே தாழ்ந்த குழுவின் குலவீரன் பாடலை உச்சரிப்பது. உறங்கா சாபமேற்ற இரவுகளில் வாழும் அற்ப  ஸ்திதி பெற்ற உயிரிகள்.

துயிலாரும் நித்திரவாரும் விலகும் எண்ணற்ற இடங்கள் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இணையும் இடங்கள்.

ஆந்திர நிலத்தை சேர்ந்த நித்திரவாரும், கர்நாடக எல்லையில் வசிக்கும் துயிலாரும் - குடுகுடுப்பை சமூகத்தை வேராகப் பெற்றிருக்கும் நித்திரவாரும், துயிலாரும் இணையும் புள்ளிகள் தர்க்க சாத்தியங்கள் உருப்பெறக்கூடிய தருணத்தில் பிரதியில் பொருந்தி வருகிறார்கள்.

சாரமான இந்த உரையாடல் புரிதலுக்காக உள்ளதோ அன்றி இதற்குள் சக விந்து சனங்களின் சொற்கள் நுழைய ஒரு இறுக்கமான வறட்டுச் சுவரை எழுப்பி வைக்கவில்லை - நீலகேசி. [சொற்களற்ற நூல் - பக் (73)]

பனுவல்களில் ஸ்தூல இருப்பும் ஏற்றமளித்தல் என்ற கோட்பாடும்:

ஆரம்பம் முதலே பனுவல்களில் 'இருப்பை' மறுத்து வந்திருக்கின்றனர். நடைமுறை உலகில் சமூகங்களுக்கிடையே கட்டமைக்கப்பட்ட உறவுமுறை பிரதிகளில் அச்சாகும் முறைமை தடுக்கப்பட்டு ஓரியல்பு மேலாண்மை நடைமுறையில் இருந்துள்ளது. கதைப்பாடல்கள் என்ற வகைமை மிகப் பிற்காலத்தில் சிறிய குழுவினரால் நிறுவனமயப்படாத எந்தவொரு ஆதரவுமற்ற சுவடிகளாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய சாத்தியங்களே அதிகம்.

நீலகேசியின் வசன அர்த்தங்களின்படி நாரதர் ருக்மணி தாயாரிடம் கதைத்து சுகர் பரீக்ச்சித்து ராஜனிடம் அறிவித்த சூத பௌராணிகர்களின் வழியே பிரம்மாண்ட தொகுப்பாய் விரியும் பாகவதமும், துயிலார்களின் கதையுலகமும் ஒரே நேர்கோட்டில் இருவேறு நிலைகளை சொல்லியிருப்பதனால் மேலுமொரு அகச்சான்றாக இதை பிராம்மணீய சாயல்களின் இருப்பின்மையை வலியுறுத்தி பிரதியின் புரிதலில் மாற்றத்தைக் கோரி நிற்கின்றது.

தாழிடுதலில் எந்தவொரு அசைவியக்கமும் நிகழாதபட்சத்தில் ஏன் காதுகளால் மட்டுமே கேட்டதை பிதிர் சஞ்சார மார்க்க போதினியில் இணைக்க வேண்டும்? அதை திப்புவின் நூலகத்திலிருந்து எடுப்பதற்கு உதவும் தேவை எங்கிருந்து வந்தது?

'எச்சில்' - என்றொரு சொல் உண்டு. மிகப்பிரமாதமான சொல். பிரதியாசிரியர் பிரதியை பற்பல மிக மென்மையான இழைகளால் இணைத்திருக்கும் அற்புதத்திற்கு சான்று  இது.

மாற்றுக்கருத்தின்றி இக்குறிப்பிட்ட இடத்தில் ஒன்றற கலக்கும் உவமையை நீலகேசி நினைவுறுத்துகின்றாள். சப்த ப்ரம்மம் நிசப்த ப்ரம்மத்தை பிரகாசிப்பிக்கிறது. என்னே ஒரு பொருத்தம். ஆஹா! பிரதியின் ஆசிரியன் சாமானியனல்லவா!

மீண்டுமொருமுறை,

சப்த ப்ரம்மம்
'நிசப்த'
ப்ரம்மத்தை
பிரகாசிப்பிக்கிறது...

நிசப்த ப்ரம்மம் செல்லியைப் போல, கோணய்யனைப் போல, ட்ரிஸ்டராமைப் போல, தாண்டவராயனைப் போல. வேறேதும் சொல்லாமல் வாசகரின் கவனத்துக்கே விட்டுவிடுகிறாள் நீலகேசி என்ற நீலகேசி வனதி.

மற்றொரு சக விந்தின் உரைகளின்படி நீலகேசியின் வசனங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன.

பாகவத கதைசொல்லிகளின் நிலையை துயிலாருக்கு அளித்தலும், நற்தூய தொகுப்பின் மதிப்பை (பாகவதம் போன்ற) பிதிர் சஞ்சார மார்க்க போதினியில் இணைந்த சர்க்கமொன்றிற்கு வழங்குதலும், சமூகக்குழுவொன்றின் தாழ்கள் அறுந்து 'எச்சில் பிரதியை' எழுதுதலும், அதை பாதுகாத்து கொணர வழி செய்தலும், 'எச்சில்' என்ற தூய்மையற்ற மொழிதல்கள் பிரதிபடுத்தப்படல் என்ற கருத்தாக்கத்துக்குள் நுழைதலும், சப்த ப்ரம்மத்தின் சமநிலையில் மொழிதல்கள் வைக்கப்படுதலும் என பல்வேறு ஏற்றங்கள் பிரதியில் உலாவுகின்றன போன்ற அர்த்த சாத்தியங்கள் அவ்விரிவின் மீச்சுருக்கமான விளக்கமாக இருக்கலாம்.

ஸ்தூல மறுப்பு பெற்ற சொற்கள் நிறுவனத்தின் எலும்புக்கூட்டை மட்டுமே அணிந்துகொண்டு நடைபாதையை அலங்கரிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. புதினத்தின் அர்த்த பொருண்மைகளைவிட தனது வசன பூசண வாக்கியமொன்றில் பிரதியின்ஆசிரியர் இதனை நிகழ்த்தியிருக்கும் விதத்தையே மேலாக பாராட்டியிருக்கிறாள் நீலகேசி.

எலினாரின் கதையுலகில்; சோங்ஹாவின் பாடல்களில்;

தன் கண்களில் அதீத கருமை படர்ந்த பிறகே அவள் மெச்சத்தகுந்த பாடல்களைப் பாடினாள் என்று 'பன்சோரி' என்ற பாடல்களின் மூலம் கதை சொல்லும் கொரிய நாட்டுப்புறக் கலையை கேட்டறிந்த சமயத்தில் நீலகேசி சிறிய குறிப்பாக விட்டுச்சென்றதை சக விந்தின் துணையுடன் அறிதல்.. எலினாரின் கதை சொல்லல் முறைமையோடு ஒத்துப்போகின்றதாக நவீன விந்தின் வாசகங்கள் தெரிவிக்கின்றன.

சோங்ஹாவும் எலினாரும் ஒரே பிரதிமையின் இருவேறு பக்கங்கள். 'எலினாரின் வெண்ணந்தகம் - சோங்ஹாவின் கரும்பரப்பு' என்ற படிமம் வாழ்வின் நெடிய சாராம்சம் என்பதே நீலகேசியின் கருத்து. காமத்தை அதன் இடையூறை வலியுறுத்தி ஆகச்சிறந்த படைப்பொன்றை சாத்தியப்படுத்திவிட ஏங்கும் இரு கலைஞர்களின் நிறைவேறிய லட்சியம். ஆதலால்தான் எலினாரின் கதை பெரும்பரப்பில் பல தர்க்க சம்பாஷணைகளுடன் விளிம்பின் எளிய வாழ்வை விவரிக்கின்றது. ஆதலால்தான்  சோங்ஹாவின் பாடல்கள் பிரபஞ்ச லயத்தில் ஒன்றுகலக்கும் பிசிறற்ற பாடல்கள்;  பாமர வாழ்க்கையாய் வெளிப்படுகின்றது.

இயற்கையின், அரூப சிதைவின் துல்லியங்கள் இசைந்து வர காமம் துறந்த எலினாரும், சோங்ஹாவும் பிரதிஆசிரியரின் தூண்டுதலற்று வாசகனிடத்தில் வந்து சேருகிறார்கள்.

அனுபவம்/நிரூபணம் - உடல் - குறித்த உரையாடல்களில் முடிவுறும் தாண்டவராயன் சரித்திரம் எலினாரின் கதைகளுக்குள் உலவும் மனிதனின் தேடலின் வழியே சரித்திரத்தின்  ஆரம்பமான அபௌருஷேயமான நாட்டார் பாடலில் துவங்குகின்றது என்பதாக நீலகேசியின் கடைசி வசன பூஷண வரிகள் நமக்குச் சொல்கின்றன. ஏன் என்றுதான் கேட்பாரில்லை.

வனமோகினி - எலினார் - செல்லி -
நீலகேசியாகிய நீலகேசி வனதி-
சக விந்தணுக்கள்



ஆதியின் முகமையில்
வேருண்ட நிலம்
பதுங்குகுழியில்...

சருகு மரம் விதை
சுழற்சியில் யாவும்

அந்திம கால கருணையாய்
மனம்
ஓர் அரூப யுவதியை இம்மண்ணில்
ஜனித்து எடுக்கிறது...

(வசன பூசணம் நிறைவுப்பாடல்.)

---------------------------------------------

நா.வானமாமலை தொகுத்த கூத்துப்பாடல்களுள் காத்தவராயன் கூத்துப் பிரதி முக்கியமானது. அவர் அந்த  கூத்துப்பிரதியில் ஏற்கனவே உருவாகியிருக்கும் சில கருத்துப்பேதங்களை மறுதலிக்கிறார். வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கும் முன்னுரை ஒரு கூத்துப்பிரதியின் பிரதான செயல்பாடு எவ்வாறு அமையவேண்டும்; படைப்பின் நோக்கம் எதைக்குறித்தது போன்ற கேள்விகளுக்கு மறைமுகமான வழிமுறைகளைத் தாங்கியிருக்கும்.

சமூகக்குழுக்கள் தங்களுள் உருவான சாமானிய ஆளுமைகளின் வழிபாட்டு வடிவங்களைப் பிரதிபடுத்துகையில் கையாளவேண்டிய கவனத்தை நா.வானமாமலையின் இக்குறிப்பிட்ட கூத்துப் பாடல் தெளிவாக்குகின்றது.

இதை மையப்படுத்தி தாண்டவராயன் கூத்தினை அணுகும்போது நா.வானமாமலையின் கூத்து குறித்த சிந்தனைகளோடு ஒன்றிப்போகிறதெனலாம்.

கோணய்யன் மறைவும், உடற்பாகங்களால் ஊர்களை எரிக்கும் கதைப்பாடல் பகுதியும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கூத்துப்பாடலும் புனைவின் நிழலோடு நாட்டார் மொழியை மெருகேற்றிய விதத்தில் ஆதார கூத்துப் பாடல்களைவிட தனித்திருக்கச் செய்ய, சுவிசேஷ வசனங்களின் இணைப்பு கதைப் பகுதியின் உபவிளக்கமாய் தொடர்ந்து வர, 'மேலோட்ட விவரணப்படி' எலினாரின் கண் நோய்க்கான மருந்தினை தேடி அடைவதை சிக்கலில்லாமல் விலக்கி வைக்கும் உயிரோட்டம் 'புதின - நாட்டார்' மொழியும், சிந்தனை சக்தியும்.

இதை வெளிப்படையாக இல்லையென்றாலும்  நண்பர்களிடத்தில் பேச்சுப்போக்கிலாவது ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.

தமிழில் அத்தகைய முதிர்ச்சியான நிலை இந்நாள் வரை உருவாகவில்லை.

(தாண்டவராயன் சரிதத்தை புதிய பிரதியென்றே உச்சரிக்கும் நீலகேசியின் "சொற்களற்ற நூல்" அல்லது அவள் தன் இறுதி காலத்தில் அவசர அவசரமாக எழுதிய "வசன பூசண வாக்கிய கதை" என்ற வெளிவராத புத்தகத்தின் சில பகுதிகளிலிருந்து)

இந்த ஜீவன், சக விந்தணு நீலகேசியின் "வசன பூசண வாக்கிய கதை" - யின் மீத பகுதியின் தேடலில்...

Sunday, July 23, 2023

புனைகதையுருவாக்கம்

முதலில் காட்சியுரு செய்த ஒன்றை மொழியின் வடிவில் பார்ப்பது ஒருவகைப்பாடு. 

மொழியை மட்டுமே பிரக்ஞையாக வைத்து எழுதுவது மற்றொரு வகை.

சொல்ல வந்ததை சாதாரண மொழிக்குள் வைத்துவிட்டு ஆங்காங்கே அசாத்திய தருணங்கள் தன்னியல்பாக உருவாகி வருவது இன்னுமொரு வகை.

புதுமையான சொல்முறை உத்தியில் கதைகளாக்குவது, தன்னனுபவ கதைசொல்லல், மேட்டிமை வெளிப்பாட்டு புனைவெழுத்து, வாசிப்பின் தாக்கங்களில் பிரதிபலித்தலாக அல்லாமல் முழுமையாகவே போலச்செய்தல் முறை, நூலாக்க/ எழுத்தாள பிம்ப ஏக்கத்தோடு ஆர்வமிகுதியில் எழுதப்படும் படைப்பு என அனைத்து சிந்தனை நோக்கோடு எழுதப்படும் படைப்புகளும் மேற்கூறிய ஏதேனுமொரு கூறுமுறையைப் பின்பற்றி படைக்கப்படும். இதில் சில விடுபடல்களும் இருக்கலாம்.

நவீன தமிழ் இலக்கிய உலகில் பல படைப்புகளும் வாசிக்கப்படாமல் தாமதமாக கவனம் பெறுவதும், எழுதப்பட்ட ஆரம்ப நிலையிலேயே பரவலாக கவனம் பெற வைக்க அனைத்து முயற்சிகளும் நடைபெறுவதுமாக இருவகை வாசிப்பியல்புகள் உள்ளன.

முழுமுற்றாக எழுத்தாளரின் எழுத்து நேர்மையால் உந்தப்பட்டு தீவிரமான கலையாக்கத்தைக் கொண்டாடுவதும், நட்புவட்ட எழுத்தின் மீது விமர்சனமற்ற பார்வையோடு அணுகுவதும், போற்றுதல் மூலம் தன்னெழுத்தை முன்னிறுத்த முனைவதுமாக படைப்பைக் கொண்டு சேர்ப்பதில் பலவகைகள்..



கூட்டு நனவலி அச்சம்

அநேக துர்நிகழ்வுகளின் கூட்டு நனவிலி உளவியல் நுட்பமான பயத்தை விநோத வடிவில் கொண்டுள்ளது.

 எல்லா நேரங்களிலும் அதிகாரத்தின் வட்டத்துக்குள் மிகவும் வசதியாகவும் அனைத்து விதங்களிலும் சிறப்பாகவே இருப்பர். இத்தகைய வாழ்வியலில் வெறுப்புணர்வின் வழி உருவான பயம், அழித்தொழிப்பை கண்மூடித்தனமாக வரவேற்கும்.

பெரும்பாலான இனப்படுகொலைகள், சாதிய வன்கொடூரங்களின் காரணங்களுள் ஒன்றாக நனவிலி மனதிலுள்ள பயம் என்ற உளவியல் உள்ளது.

காலனியா? சேரிப்பகுதியா? வேற்று மதத்தவர் வசிக்கும் பகுதியா? அரசுக் குடியிருப்பா? இவ்விடங்களின் ஒவ்வாமை உருவாக இதே அச்சவுணர்வும் ஒரு காரணம்.

காலகாலமாக பழக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால் ஆழ்மனதில் சேகரிக்கப்பட்டு ஒவ்வாமையாகவும் , வெறுப்புணர்வாகவும் வெளிப்படுகிறது.

அதிலிருந்தே கருத்தியலும் கட்டமைக்கப்படுகிறது. 

அப்பட்டமாக வெளிப்படுவதைவிட,  பதியப்பட்டு ஒளிவுத்தன்மையோடு இருப்பதாலேயே நனவிலி அச்சம் ஒரே நேரத்தில் ஆபத்தானதாகவும், சிந்தனையின்மையோடும் செயல்படக்கூடியது. 

பல உதாரணங்கள் சொல்லலாம். சமீபத்திய மணிப்பூர் இனப்படுகொலைகள் நிகழ்வதில் நனவிலி அச்சம் பெரும்பங்கு வகிக்கிறது. 

 சட்டமுறைமையோடு கையாளப்படவேண்டிய நிலமும் அதன் உரிமையும் கலவரமாக வடிவம் பெற பாசிசம் உருவாக்கிய கூட்டு சமூக அச்சம் அசாதாரணமானது.

நீண்ட கால வரலாற்றில் அடிப்படைவாதம் உள்நுழைந்தால் இத்தகைய பேராபத்துகளே நிகழும்; என்றென்றைக்குமான உண்மை.

நனவிலி அச்சம் காரணிகளுள் ஒன்றுதான், தீவிர உரையாடலுக்குள் கொண்டுவரவேண்டியது. பார்ப்போம்....

Wednesday, July 19, 2023

யதார்த்தவாத கதையாடல்

புனைகதைகளை மாய யதார்த்தவாத,  பின்நவீனத்துவ கோட்பாடுகளாக அதன் பின்னணியிலிருந்து உரையாடல்களை விரிவாக்குவது ஒருபுறமிருக்க அதே படைப்புகளை யதார்த்த பரிமாணங்களுக்குள் கொண்டு வருவதும் பிழையல்ல. பா.வெங்கடேசனின் கதைத்தொகுப்புகள் கோட்பாட்டுவாதங்களுக்குள் விமர்சகனை எளிதாக சிக்க வைப்பதை அங்கொன்று இங்கொன்றாக எழுதப்படும் கட்டுரைகளின் மூலம் கிடைத்தாலும் படைப்புக்குள் நேராக, சூட்சும லாவகத்தோடு எழுதப்பட்டு வாசிக்கப்படும் யதார்த்தங்களை வாசிப்பின்போதே பிடிபட நேர்வதும், உருவாகிக்கொண்டிருக்கும் தருணங்களும் ஏராளமானது. பாகீரதியை அவரது உறவினர் வசைபாடி வீட்டிற்குள் சேர்க்காமல் துரத்திவிடுவார். உறங்காப்புளியோடு வெளியேறும் பாகீரதிக்கு வேறொரு காலத்தில் கனவுகளுக்குள் யதார்த்தம் படிந்து ஒருவித எதிரியக்கத்தை ஏற்படுத்திவிடும். பௌதீக இன்மையும் பாகீரதியின் இருப்பும் ஒரே யதார்த்த உலகில் நிகழும் இருவேறு மாயங்களாக இல்லாமல் காலப்பின்னியக்கமாகவும் வரலாற்றை நிகழ்த்திக்கொண்டிக்கும் தற்தருண யதார்த்தப் பிரக்ஞைக்குள் உலவும் மனிதர்களின் பிறழ்பட்ட நிகழ்வுகளாகவும் மாறிவிடுகிறது.
இங்கு மனிதர்கள் பிறழ்வதில்லை, அவர்களுடைய யதார்த்தங்கள் சிக்கலாகி பிறழ்ந்துவிடுகிறது. கனவாக ஒன்றை அனுபவிப்பவர்  முரண்களையே  யதாத்தங்களின் பெருமகிழ்ச்சியாக்கி ரசிக்கிறார்.