Pages

Sunday, June 4, 2017

வே.நி.சூர்யா, வெங்கட் (நிழல்), திரு (சீனுலதா) - கவிதைகள்

"சில சமயங்களில் புதியவர்கள் எழுதும் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்த கவிதைகளை விட சிறப்பாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்டவற்றை மாபெரும் கவிதை சந்தையிலிருந்து அடையாளம் காண்பதென்பது அரியதொரு செயல்"

1)  வே.நி.சூர்யா 

இருப்பிற்கும், இன்மைக்கும் இடைப்பட்ட வெளியை பரிசோதிக்கும் முயற்சிகளும், சமூகத்தின் ஒற்றைச் சாய்வு முறைமையின் மறுபக்கத்திற்கான சொற்களும் கவிதைகளாக மாறும் சமயம் நினைவிருத்த வேண்டிய பகுதிகளின் பயிற்சியே சூர்யாவின் கவிதைகள். 

மாறாமலிருக்கும் இவ்வுலக சௌந்தர்யரத்தின் மேலான சொத்தை அடியாக சில கவிதைகள் தேங்கி நிற்கின்றன என்பதே மேலும் சிறிது காலம் கழித்து எழுதப்பட வேண்டிய கவிதைகள் அவையென்பதை வாசகனுக்கு உணர்த்துவதோடு எந்த குறையையும் தன்னுள் கொள்ளவில்லை. 

சூர்யாவின் கவிதைகள் அவர் வரிகளுக்கு மாற்றாக காலங்களில் பேசப்படலாம். 

http://suryavn.blogspot.in/

வறுமை ஒழிக்க ஒரே வழி
------------------------------------------
நாமெல்லாம் இன்னொருவரின் கற்பனையாக இருக்கலாம்
அப்படி இருந்தோம் எனில்
அந்த இன்னொருவர் இன்னொருவரின் கற்பனையாய் இருக்கலாம்
இது தொடர்வரிசை.
முடிந்தால் ஒன்று செய்யவோம்
என்னை உங்கள் கற்பனையில் பயன்படுத்த பணம் என்று அந்த இன்னொருவரிடம் இருந்து வசூலிப்போம்
இப்படியாவது இந்த முதலாளித்துவ உலகில் பணக்காரன் ஆகிவிடுவோம். 

***

பிளந்தாயிற்று
----------------------

புலம்பிகொண்டே இருக்கும்
நாக்கை அறுத்தாயிற்று 
கிறுக்கிக்கொண்டே இருக்கும்
கையை அறுத்தாயிற்று
நடந்து கொண்டே இருக்கும்
காலை வெட்டியாயிற்று
மூச்சு விட்டு கொண்டே இருக்கும்
இதயத்தை பிளந்தாயிற்று.
அமைதியாகவே இருக்கும் மீதியை
என்ன செய்வதென்றே தெரியவில்லை

***

கடிகாரம் சொன்ன கதை 
--------------------------------------

புதியதாக கட்டிய வீடு
வீட்டின் சுவர் எல்லாம் கடந்த காலம்
வீட்டின் சன்னல் எல்லாம் எதிர்காலம்
வீட்டின் உள்ளே எல்லாம் நிகழ்காலம்
வெளியில் இருந்து பார்த்தால் வீடு
கண்ணுக்கு தெரியாது
அந்த இடத்தில் அடையாளத்திற்கு
வேப்பமரம் நட்டுவைத்து திரும்பி பார்த்தேன்
பயங்கரமான மரமாக வளர்ந்திருந்தது
யாரை பொறுத்த வரைக்கும் அங்கு வீடு இல்லை
ஆனால் என் கடிகாரத்திடம் கேட்டால் சொல்லும் டிக் டிக் என திகிலுட்டிக்கொண்டே அந்த வீடு கட்டப்பட்ட கதையை
தேர்ந்த கதைசொல்லி என் கடிகாரம்
ஆம்
உன் கடிகாரமும்
உன் கடிகாரத்தை கொடு
என்ன கதை என கேட்போம்
வா நண்பா

***

2) வெங்கட் (நிழல்)

முழுமையாக அழகியலின் பாற்பட்டு அதன்மேல் தீராத நம்பிக்கையுள்ள ஒருவரின் கவிதைகள் இவை. முதல் ஒலியில் கரையும் இசை, பார்த்த பொழுதில் நிகழும் இராசாயன இரகசியம், அதீதமில்லா கவர்ச்சி என்பதே வெங்கட் கவிதைகளின் அடிப்படை. அதில் கவிஞனின் ஆன்மா செயலுறும் பாங்கு இயற்கையோடு தோய்ந்த வரிகளை மீட்டெடுக்கின்றன.

தானாக சுலபமற்று நிகழும் அரிய தருணங்களின் காட்சிப் பிரதிகளாய் இருக்கின்றன இவரது கவிதைகள்.  அழகான இசை, ஓவியம், இயற்கையின் நிச்சயமில்லா காட்சிப்புலன்கள் என்பதோடு குழந்தைகளை ஒத்த வாழ்வோடு எழுதப்படும் கவிதைகளோடு இன்னமும் சில புதிய குரல்களை வரவழைப்பது ஒன்றே வெங்கட் அவருடைய கவிதைகளின் பூரணத்தை நிறைவுபடுத்தக்கூடிய வழியாக இருக்கும்.

குழந்தைகளோடு ஒருமித்து வாழும் படைப்பாளிக்கு, குழந்தைகளுக்கும் கவிதைகளுக்கும் இடைப்பட்ட வேற்றுமையை அளவிடுவது அத்தனை சுலபமல்ல. 

http://sollinnizhal.blogspot.in/

கார்கால நிறத்து ஆகாயத்திற்கருகில்
விருட்சமொன்று
ஒரு நுறு பட்சிகளை அணைத்தபடி
மிதக்கிறது.
நின்ற கணத்திலிருந்து அசைந்த கணம்
திசையெங்கும் சிதறுகிறது மரத்தின் நிழல்.
என் இருதயத்தின் தொலைதூரத்து
சொற்களெல்லாம்
கூடுகட்டத் திரும்புகிறது
படபடத்து இப்போது.

*** 
எந்த அறிகுறியுமற்று
ஏதோவொன்றாக விடிந்துவிடுகிறது 
சில பொழுது. 
இசையாக
காற்றில் மிதந்து செல்கிறது உடல் 
இலேசாகவும் கனமாகவும் இல்லாது. 
ஒரு சிக்னல் தேவைப்படுகிறது,
அந்த நிறுத்தத்தில் 
அருகிலொரு வாகனம் தேவைப்படுகிறது, 
அதில் ஒரு சின்னஞ்சிறு சிறுமியின்
ஏதாவது இரண்டு சொல் தேவைப்படுகிறது 
இந்த நாளை அநாதையாக்காமல்  
தொட்டுத்தூக்க.

***

மேசைமேல் நின்று
படபடக்கும் புத்தகத்தை
இந்தப்பக்கமிருந்தும் அந்தப்பக்கமிருந்துமாக
இருவர் வாசிக்கிறார்கள்.
ஒரே கணத்தில் ஒரே சொல்லை
இருவரும் சொல்லும் பொழுது
கவிதை மறைந்து
புத்தகம் தொலைந்து
கண்ணாடியாகிறார்கள்
இவனுக்கு அவனும்
அவனுக்கு இவனும்.

***

ஹிட்லர்
பழைய தூரிகைப் பெட்டிக்குள்
பிரியம் நிறைத்து ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
நாள் தவறாமல்
அந்தத் துப்பாக்கியை இதமாகத் துடைத்துவிடுவார்.
வைக்கும் நொடிக்குமுன்
யாரும் கண்டுவிடாதபடி கண்களை சுழற்றிவிட்டு
அன்பொழுக அழுத்தி முத்தமிடுவார்.
ஸ்பரிசம் கிட்டாத ஏக்கத்தில்
கண்ணாடி சன்னல் வழியே
எச்சில் ஒழுக்கிக்கொண்டிருக்கும் வளர்ப்பு நாய்கள்.
ஈரக்காற்றாலான தருணம் ஒன்று
எங்கிருந்தோ பீடிக்க
சிலநேரம் மிரண்டு
திசைகாணாது தூக்கி எறிவார்.
அவரது செல்லமான நாய்க்குட்டிகளோ
இளைப்பெடுக்க பற்றிவரும்
அவருக்கு நேராகத் துள்ளிக்கொண்டு.
தோட்டாக்கள் இழகும் காலமொன்றில்
தூரிகையால் அழுத்திக்குழைத்து
தன்உடலில் துப்பாக்கியை வரைந்துவிட்டு
உறங்கப்போனார்.

***


3) திரு (சீனுலதா)


திரு சுவாரசியமான கவிஞர். புதுமை, மாற்று சொல்லாடல், ஒரே நிறத்தை வேறொரு வடிவில் கவிதையாக்கல் போன்ற முயற்சிகளை முதிர்ச்சியோடு வெளிப்படுத்துபவர். 

சமூக அவலங்களையும், வன்மமிக்க அரசியல் நெறிகளின் தூய தர்மங்களையும் பகடி செய்யும் கவிதைகள் மறுபக்கம் ஆண்Xபெண் உறவு மையத்தின் இணைக்க முடியாத சரடுகளை தீராத அன்பின் எளிய வழிகளில் முன்னிறுத்தும் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

தத்ரூபற்ற தன்மைகளால் நிறையும் முக்கியமான கவிதைகள் செம்மையைக் கோரும் தருணங்களை வாசகன் கடப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிடுவது முதிர்ச்சியின் பலமின்மையில் விழும் ஓட்டை சரிபாதி கவிதைகளே சமன் செய்கின்றன.

யோசித்து, பொறுமையாக செயல்படும் திருவின் கவிதைகள் தொகுப்பாக வெளிவரும் காலத்தில் அவை தனித்து நிற்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.


என்ன வண்ணமோ மனசுல....
------------------------------------------------------


இப்பெருநகரத்தின் நெரிசலான நடைபாதையில்
அமர்ந்தபடி குரலெடுத்தால்
ஒரே பாடல், குமிழ்களாய் மோதி
வர்ணங்களாய் உடைந்தொழுகுகிறது
வானத்துக் கருமை
கால்களிலிருந்து சொட்டியபோது
நட்சத்திரங்களை போல் மின்னி மறைவுற்றார்கள்
மாம்பூ வர்ணத்தின் இளகிய தசை
புளித்த இனிப்பை கண்களுக்கு வழங்கிச்சென்றது
களிநடை பயின்ற கத்திரிப்பூ வர்ணத்திற்க்கும்
கணுக்காலில் சிவந்தொழுகும் செம்பருத்திப்பூ தருணத்திற்க்கும்
கொலுசு செய்து தோற்றுப்போவதில்
என் பாடல்கள் முனைப்புகாட்டுகின்றன
பாதசாரிப் பெண்டீர்களின்
வனப்பான கால்களும் வண்ணவண்ணக் கால்சாராய்களும்
கண்களைப் பறிக்கும் பொழுதுகளில் – என்னையறியாமல்
ஒரு அபஸ்வரத்தை மீட்டித்தொலைக்கின்றேன்
இந்நகரத்தின் எல்லா நடைபாதையிலும் அமர்ந்தாயிற்று
நெஞ்சிலெழும் அப்பாடலைச் சொல்லி எந்த குற்றமுமில்லை
அது என் குருட்டு மனைவிக்கு பிடித்தமான பாடல்
எனக்கும் அவளுக்குமான அந்தரங்க பொழுதுகள்
வர்ணங்களின் விநாடிமுள்ளில் துடித்துக்கொண்டிருப்பதாக
நம்பிக்கை கொண்ட ஒரு நாளில்
பழுப்புநிற பஞ்சுப்பொதி காலொன்று
பேரிரைச்சலின் கூட்டிசைப்பாக
அபஸ்வரத்தை மீட்டித்தொலைத்தது
அதிர்நடையிட்ட செம்பழுப்புத் தொடைச்சதைகள்
பிரியாணிப் பொட்டலமாய் உதிர்ந்து விழுந்தபோது
வறண்ட தொண்டையும் இருண்ட கண்களுமாய்
நான் ஒரு லெக்பீஸை கடித்து முடித்திருந்தேன்
துடித்தடங்கிய பழுப்பு வர்ணம்
மனைவியின் பொட்டைக் கண்களை நினைவூட்டியபோது
ஒவ்வாமையின் காரம் கண்ணீராக வழிந்தூறியது
கறிச்சதைகள் நீக்கம் பெற்ற லெக்பீஸ்துண்டு
என் போலியோ கால்களை அப்பட்டமாக நினைவூட்டியபோது
கசிந்துகொண்டிருந்த இசையின் நாண்புடை படீரென அறுப்பட்டது

***

உனக்கும் எனக்குமான வெற்றிடத்தில்
ஒரு உறவை கட்டியெழுப்பியாக வேண்டும்
வெற்றிடத்தை வெளிப்பூச்சுக்கொண்டு மறைக்கும் கலையை
உன் பாணியில் நீயும் என் பாணியில் நானும்
மற்றெல்லோரைப் போலவும் கற்றுத் தேர்ந்திருந்தோம்
காற்று புகாத வெற்றிடத்தில் நீரையும் நெருப்பையும்
நாம் சமைத்தாக வேண்டும்
சீரில்லாத அலைவரிசையில் இருவரின் கைகளும் துழாவி ஒய்ந்தன
இன்னதென்றில்லாத ஒழுங்கில் உறவு எழும்பினாலும்
வடிவங்கள் குலைவது வெற்றிடத்தின் இயல்பு
குணவதியே
என்னிடம் ஆணி இருக்கும்
உன்னிடம் அன்பு இருக்கும் தானே
குலைந்த சட்டகத்தில் இடம் பார்த்து ஆணியை வைக்கிறேன்
அன்பு கொண்டு ஓங்கி அறை
ஆணிக்கூர்மையின் மினுப்பு ஆழமாய் இறங்கட்டும்.

***

உன் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
நம்மை சுற்றிலும் இருள் படர்ந்தாகிவிட்டது
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை
நாம் எடுத்துவைக்கும் அடுத்த அடி இழுத்துக் கொள்ளும் அதல பாதாளமோ
புதைச்சுழியின் பெருமணலோ
யாரறிவார்
உன் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
இவ்வுலகில் யாருக்கும் யாரும் துணையில்லாத போதும்
பாசாங்கு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் -உன்
கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
நடுங்கும் என் விரலுக்கு
மெலிதான முத்தம் போதுமானதாக இல்லை – ஆயுள் ரேகையென
மூச்சுக் காற்றை கைகளுக்கு நடுவில் பதித்துவை – உன்
கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்

***

முசலுக்குட்டி நஸ்ரியா மூஞ்சூறு அஞ்சலி

---------------------------------------------------------------------

என் அறைகளில் வலுக்கட்டயாமாக புகுந்துகொண்ட
மூஞ்சூறுவை வெளியேற்ற முடியாமல்
தோற்றப்போது அது பழிப்புகாட்டிச் சென்றது
இடுக்குகளிலிருந்து சின்னஞ்சிறிய தலையை
எட்டிக்காட்டி தன்கூம்பு வாயை குவிக்கும்போது
அறையை முழுவதுமாக வியாபிக்கிறது
நாவை ஒழுங்குசெய்து இடதுகண்ணை சிமிட்டும்
இமை உரசலில் தீ அறையில் பரவி தகிக்கிறது
பசித்திருக்கும் தனிமையை அது சாப்பிட்டபோது
அறையை பகிர்ந்துகொள்ள முசலுக்குட்டி ஒன்று
வம்படியாய் வந்துவிட்டது
பசிதாங்காத நானும் முசலுக்குட்டியும்
சுடச்சுடப் பாலை காய்ச்சிப் பருகினோம்
முசலுக்குட்டி பாலின் வெப்பம்தாளாமல் சாம்பல் ஆனது
சாம்பலிலிருந்து வெளியேறிய மூஞ்சூறுவின் வெப்பமூச்சு
பாலை மீண்டும் சூடாக்கிப் முசலுக்குட்டியை வெளியேதள்ளியது
மாறிமாறிப் பசியாறிய இச்சங்கிலித்தொடர் மயக்கத்தில்
சாம்பல்வடிவ மூஞ்சுறுவை
முசலுக்குட்டி என அழைத்துவிட்டேன்
தன் உடலை மாற்றியதற்காக முசலுக்குட்டி
அறையில் இருந்து கோவித்துக்கொண்டு வெளியேறியது.
பின் ஒருநாள் மூஞ்சூறுவும் அறைபிடிக்காமல்
வெறுத்துப்போய் தானாக வெளியேறிவிட்டது
தகிக்கும் சாம்பலும் அதில் காய்ந்துகொண்டிருக்கும் பாலும்
குறும்பு கொப்பளிக்கும் கண்களும் மட்டும்
அறையில் மிச்சம் இருக்கிறது.
அத்தை பொண்ணு ஆண்ட்ரியா…
தொண்டையில் கூழாங்கற்களை அதக்கியிருக்கும்
என் அத்தை பெண்ணின் குரல்
அடைத்துக் கொண்டு வரும்
செப்புக்குழல் மின்சாரமென பாயும்
ஆகப்பெரிய கலகக்குரலில் அவள்
மாமாக்களின் டவுசரை
அவிழ்த்து சீட்டியடிப்பாள்
டவுசரை பிடித்தபடி
அலறிக்கொண்டு ஓடும் மாமாக்களை
சில சமயம் மஞ்சுவிரட்வது போல்
ஆராவரத்துடனும்
சில சமயம் மஞ்சத்தண்ணீர் ஊற்றுவதுபோல்
ஆசையுடனும்
அவள் குரல் விரட்டித் துரத்தும்
மத்யம சஞ்சாரத்தில்
‘மா’ ‘மா’ என விதவிதமாக
ஆலாபித்து அழைக்கும் அத்தைமகள்
ஓரிடத்தில் பெருங்குரலெடுத்து
மாம்ம்மா என அழுத்தம் கொடுத்து
விரட்டி விளையாடுவாள்
கெளுத்தி முள்ளின் அழுத்தமென
கண்களில் நீர் விட்டு
உச்சம் தொடும் அவ்விடம்
வெறும் குரல் மட்டுமல்ல
என் சக மாமா பயல்களே…
ஐட்டம் சாங் எனும் பிரேதப் பாடல்:
கால்களின் குதியாட்டத்தில்
பிரேதங்களை தனித்தனியாக
பிரித்து கண்களுக்கு
பரிசோதிக்கத் தரும் அவள்
இன்று தன்இடையை
உடலோடு சேர்த்து அந்தரத்தில்
கால் உயர்த்தி ஆடுகிறாள்
இரத்தம் சொட்டும் உதட்டுச்சாயத்தில்
மையிட்டொழுகிய கண்களை வெளியிட்டு
தன் அகாலத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறாள்
காதலியொருவள்:
எனதன்பு காதலியொருவள்
குருவி போன்ற அடக்கமான நீள்வட்ட முகத்தில்
ரேவதியின் சாயலில் சிரிப்பாள்
எனதன்பு காதலியொருவள்
கண்ணாடியணிவித்த மாதவியின் சாயலில்
நெடுநெடுவென தோகை விரிப்பால்
எனதன்பு காதலியொருவள்
வெள்ளை நிறச் சரிகாவென
வட்டமுகச் சாயலில் மூக்கை சிணுக்குவாள்
எனதன்பு காதலியொருவள்
மெலிதாகத் துருத்தும்
அஞ்சலித் தொப்பையில்
சாயலைக் கூட்டுவாள்

எவ்விதச்சாயலும் கலக்காத
தனித்துவ நடிகனாக
அவர்களின் முன்னே
நடிக்க முயன்றுகொண்டிருக்கும் என்னிடம்
பேரன்பும் பெருமழகும் கொண்ட
அனைத்துக் காதலிகளும் ஒற்றைச்சாயலில்
ஒருங்கே இணைகிறார்கள்
உலக நடிகர்களின் வழக்கம் மாறாது
வசனம் மறந்து
கனாக் காலங்களில்
உறைந்து கொண்டிருக்கிறேன்.

எளிதன்றோ…
அஃதெனினும் இனிதன்றோ!
நடிகனாக இருப்பதைவிட
எப்போதும் தள்ளி நிற்கும்
ரசிகனாகவே இருப்பது.

சன்னி லியோனும் சமையல் சாமானும்…
--------------------------------------------------------------------

வறண்டு கிடக்கும் இப்பாலை பிரதேசத்தில்
சன்னி லியோன் சமைந்துகொண்டிருக்கிறாள்
சமைத்துக்கொள்ளும் முன்னமே தன்னை
பரிமாறிக்கொள்ளும் கலையரசி அவள்
நதியில் செல்லும் அன்னப்பட்சி போல்
கால்களை பின்னிப் பின்னி இப்பாலை நிலத்தில்
நீந்தியபடி சமைந்துகொண்டிருக்கிறாள்
சொருகும் அவள் கண்களிலிருந்து விரியும் உடல்
ஆலிவ் இலையை தூவும் பறவையின்
சிறகென அசைகிறது
தூவப்பெற்ற ஆலிவ் இலைகள்
பொய்க்கோப முனிவர்களின் சடாமுடியில்
எச்சமென வீழ்கிறது.
கொதிக்கும் அவள் பாலை உடம்பின்
தளும்பும் மணற்மேட்டின்
அந்தகார நிழலில் இளைப்பாறுகிறேன்
உருகிக் கசியும் அவளின் சமையல் மணத்தில்
புதைமணலையும் சுழிக்காற்றையும்
அவசர அவசரமாகக் கடந்து
சமைந்துகொண்டிருக்கும் அப்பரதேவதையின்
குடவரை கோயில் வாயிலில்
ஆதியந்தம் தொலைத்த அந்தர்யாமியாய்
பசிமறந்து தியானித்துக்கிடக்கிறேன்

***