Pages

Sunday, August 6, 2023

நீலகேசியின் மறு உரையாடல்/சொற்களற்ற நூல்கள்....


அகசூனியத்தில்
ஸ்தூல வெளியின் கருமைப்பரப்பில்  மிதக்கும் நீலகேசி வனதியின் அரூப
பிம்பங்கள் சகிதமாக
ஓர் உன்மத்த சாயை - தாண்டவராயன்

இதுகாறும் காணக் கிடைக்கும் பத்திகள் சாராம்சமிக்க பிராரம்ப உசாவல்களாகவும், பாரம்பரிய சடங்கு வழியில் செய்யப்பட்ட கடன் தீர்க்கும் முறையிலும் தேங்கி நிற்கின்றன.  கேட்ட குரலையே மீளச் சொல்லும் பாங்கிலிருந்து விலகி மாற்று ஏற்பாடு செய்ய ஆசிரியரே முன் வருவது எத்தனை அபத்தம். ஒரு மொழியில் முயற்சிக்கப்பட்ட பிரதி தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்வது அசாத்தியமான காரியம் என்ற சிந்தனையே அவலமானது, மேலும் ஒட்டுமொத்த கதாவாசக கும்பல்களிலிருந்து ஒரு விந்து முதற்பிரதியின் பாற்பட்ட ஸ்நேகத்தாலும் (ஒருவேளை பரிதாபத்தாலும் கூட) அதை அண்டி அன்போடு அணுகுவதென்பது போற்றத்தக்கதல்ல.

இப்போற்றத்தக்க நிலையிலிருந்துகொண்டுதான் ஒரு பிரதியை ஏற்றுக்கொள்வதை நீலகேசியும் முயல்கிறாள். நீலகேசி சிங்கள இனவாதம் தோன்றவியலாமலிருக்க எந்த சிரத்தையும் மேற்கொள்ளாத பௌத்தத்தை அன்றே மறுத்துவிட்டு சமணத்தை அங்கீகரித்தவள். அவள் வழிவந்த இவளும் சாமானிய வாசகி. அவள் அர்த்தங்களுக்கொப்ப சில வாசிப்புச் சாத்தியங்களை இப்புதிய பிரதிக்கு அளிக்க விரும்பினாள்.

நீலகேசியின் உசாவற்படி ஆயிரமாம் ஆயிரம் வருடங்களாய் அழிவின்றி இடைவிடாது ஓரிடத்திலிருந்து கிளம்பி அலைந்து பிரிவுற்று இறுதியில் கடல்புகும் நதியின் பரந்த அசைவைப் போன்ற இவ்வுலகக் கதைப்பரப்பில் எங்கோ நடுவில் ஓரிடத்திலிந்து இழுத்து எடுக்கப்பட்ட கதைத்தொகுப்புகள் சர்க்கங்களாய் விரிந்ததாகவும், பிரம்மாண்டப் பெருவெளியின் மூலையொன்றிலிருந்து பிரித்து உருவப்பட்ட சொற்களின் தொடர் சேர்க்கை இப்பிரதியின் பகுதிகளாய் மாறிப்போனதாகவும் சொல்லப்பட்ட இப்புதிய பிரதி ஓர் அர்த்தமற்ற பித்தத்தனத்தில் தனக்கேதனக்காய் பேசியவளின் செய்கைகளைக் கண்ணுற்றவர்கள் அவள் இடையின்றி மேலும் பேசுவதற்காக காத்திருந்தனர்.

அவசியமேயில்லாமல் பல இடங்களில் ஆசிரியப்பிரசன்னம் நிகழ்வதாக அவன் குறைபட்டுக்கொள்ள நீலகேசியோ அவன் ஊடுருவலின் முக்கியத்துவம் குறித்துப் பேசலானாள். 

புரட்சி என்ற சொல்லையே நீக்கியவள் எலினார் என்பதை வரலாற்றின் கடைசி வாசகனுக்குக் கடத்திவிட நினைப்பதும், தத்ரூபத்தின் முதிர்ச்சியின்மையைப் புரிய வைப்பதும் சாத்தியமாகாத ஒன்று. அதற்கு இப்பிரதியையும் தொழிலாக வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர ஊடறுத்தல் ஒருவித குறைபாடு என்ற மனோநிலை குறிப்பிட்ட இடத்தில் பொருந்தி வராது.

ஆமோதிப்போரின் நடுவில் உருவான வெற்றிடம் தன் காய்ந்து போகாத ஒற்றைப் பரிமாணமிழந்த சுயகேள்வியின் வெளிப்பாடாகும் என்பது நீலகேசியின் நம்பிக்கை. அவள் சலசலப்பான பேச்சுத்தொகைகளுக்கு சோரம் போகாத திண்ண உரையாடல்களை செறிவாக்குவதில் பயிற்சி செய்பவள். ஒரு சகவிந்து பார்ப்பனீய அம்சங்களின் முதன்மையை பூடகப்படுத்துவதை எதிர்கதையாடல் என்ற புரிதலின் சாரத்தை படர்த்துவதன் மூலம் ஆசிரியனற்ற பிரதி செயல்படும் சாரத்தை விளக்கினாள்.

ஒரு கண்ணாடியைப் போல
எதிர் எதிராக
இருவேறுபட்ட
எதிர்வுகளின்
நித்தியம் 
தாண்டவராயன், ஓர் எதிர் கதையாடல்


துயிலார் X நித்திரவார்:

துயிலார் இனத்தின் வேர் குடுகுடுப்பை சமூகம். ஒன்பது கம்பளத்தார்களில் "நித்திரவார்" குழு மட்டுமே குடுகுடுப்பைத் தொழிலில் ஈடுபடும்.

தொல்கதைகளின்படி "நித்திரவார்" என்பது உறக்கத்தினால் ஏற்பட்ட ஒரு பெயர்.  புலாலில் வலு பிரசித்தம் பெற்ற மாட்டிறைச்சியை மறுக்கிறார்கள் இவர்கள்.  தாழ்த்தப்பட்ட குழுக்களோடு பிற சமூகக்குழுக்களின் உறவெப்படியோ அதிலொரு எள்ளும் வேற்றுமையற்ற உறவு. சுருக்கமாக போலச்செய்தலின் உதாரண குழுக்களில் ஒன்றே நித்திரவாரும்.

பிரதியின் சூட்சுமம் இக்குறிப்பிட்ட தளத்தில் வெளிப்பட்டுவிடும் என்ற அர்த்தத்தில் நீலகேசி மேலும் எழுதியதாவது:

துயிலார் திரும்பச்செய்தல், போலச்செய்தலுக்குள் வரையறுக்கப்படாது தனித்திருக்கும் இனம். அவர்களின் முதற்பணியே தாழ்ந்த குழுவின் குலவீரன் பாடலை உச்சரிப்பது. உறங்கா சாபமேற்ற இரவுகளில் வாழும் அற்ப  ஸ்திதி பெற்ற உயிரிகள்.

துயிலாரும் நித்திரவாரும் விலகும் எண்ணற்ற இடங்கள் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இணையும் இடங்கள்.

ஆந்திர நிலத்தை சேர்ந்த நித்திரவாரும், கர்நாடக எல்லையில் வசிக்கும் துயிலாரும் - குடுகுடுப்பை சமூகத்தை வேராகப் பெற்றிருக்கும் நித்திரவாரும், துயிலாரும் இணையும் புள்ளிகள் தர்க்க சாத்தியங்கள் உருப்பெறக்கூடிய தருணத்தில் பிரதியில் பொருந்தி வருகிறார்கள்.

சாரமான இந்த உரையாடல் புரிதலுக்காக உள்ளதோ அன்றி இதற்குள் சக விந்து சனங்களின் சொற்கள் நுழைய ஒரு இறுக்கமான வறட்டுச் சுவரை எழுப்பி வைக்கவில்லை - நீலகேசி. [சொற்களற்ற நூல் - பக் (73)]

பனுவல்களில் ஸ்தூல இருப்பும் ஏற்றமளித்தல் என்ற கோட்பாடும்:

ஆரம்பம் முதலே பனுவல்களில் 'இருப்பை' மறுத்து வந்திருக்கின்றனர். நடைமுறை உலகில் சமூகங்களுக்கிடையே கட்டமைக்கப்பட்ட உறவுமுறை பிரதிகளில் அச்சாகும் முறைமை தடுக்கப்பட்டு ஓரியல்பு மேலாண்மை நடைமுறையில் இருந்துள்ளது. கதைப்பாடல்கள் என்ற வகைமை மிகப் பிற்காலத்தில் சிறிய குழுவினரால் நிறுவனமயப்படாத எந்தவொரு ஆதரவுமற்ற சுவடிகளாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய சாத்தியங்களே அதிகம்.

நீலகேசியின் வசன அர்த்தங்களின்படி நாரதர் ருக்மணி தாயாரிடம் கதைத்து சுகர் பரீக்ச்சித்து ராஜனிடம் அறிவித்த சூத பௌராணிகர்களின் வழியே பிரம்மாண்ட தொகுப்பாய் விரியும் பாகவதமும், துயிலார்களின் கதையுலகமும் ஒரே நேர்கோட்டில் இருவேறு நிலைகளை சொல்லியிருப்பதனால் மேலுமொரு அகச்சான்றாக இதை பிராம்மணீய சாயல்களின் இருப்பின்மையை வலியுறுத்தி பிரதியின் புரிதலில் மாற்றத்தைக் கோரி நிற்கின்றது.

தாழிடுதலில் எந்தவொரு அசைவியக்கமும் நிகழாதபட்சத்தில் ஏன் காதுகளால் மட்டுமே கேட்டதை பிதிர் சஞ்சார மார்க்க போதினியில் இணைக்க வேண்டும்? அதை திப்புவின் நூலகத்திலிருந்து எடுப்பதற்கு உதவும் தேவை எங்கிருந்து வந்தது?

'எச்சில்' - என்றொரு சொல் உண்டு. மிகப்பிரமாதமான சொல். பிரதியாசிரியர் பிரதியை பற்பல மிக மென்மையான இழைகளால் இணைத்திருக்கும் அற்புதத்திற்கு சான்று  இது.

மாற்றுக்கருத்தின்றி இக்குறிப்பிட்ட இடத்தில் ஒன்றற கலக்கும் உவமையை நீலகேசி நினைவுறுத்துகின்றாள். சப்த ப்ரம்மம் நிசப்த ப்ரம்மத்தை பிரகாசிப்பிக்கிறது. என்னே ஒரு பொருத்தம். ஆஹா! பிரதியின் ஆசிரியன் சாமானியனல்லவா!

மீண்டுமொருமுறை,

சப்த ப்ரம்மம்
'நிசப்த'
ப்ரம்மத்தை
பிரகாசிப்பிக்கிறது...

நிசப்த ப்ரம்மம் செல்லியைப் போல, கோணய்யனைப் போல, ட்ரிஸ்டராமைப் போல, தாண்டவராயனைப் போல. வேறேதும் சொல்லாமல் வாசகரின் கவனத்துக்கே விட்டுவிடுகிறாள் நீலகேசி என்ற நீலகேசி வனதி.

மற்றொரு சக விந்தின் உரைகளின்படி நீலகேசியின் வசனங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன.

பாகவத கதைசொல்லிகளின் நிலையை துயிலாருக்கு அளித்தலும், நற்தூய தொகுப்பின் மதிப்பை (பாகவதம் போன்ற) பிதிர் சஞ்சார மார்க்க போதினியில் இணைந்த சர்க்கமொன்றிற்கு வழங்குதலும், சமூகக்குழுவொன்றின் தாழ்கள் அறுந்து 'எச்சில் பிரதியை' எழுதுதலும், அதை பாதுகாத்து கொணர வழி செய்தலும், 'எச்சில்' என்ற தூய்மையற்ற மொழிதல்கள் பிரதிபடுத்தப்படல் என்ற கருத்தாக்கத்துக்குள் நுழைதலும், சப்த ப்ரம்மத்தின் சமநிலையில் மொழிதல்கள் வைக்கப்படுதலும் என பல்வேறு ஏற்றங்கள் பிரதியில் உலாவுகின்றன போன்ற அர்த்த சாத்தியங்கள் அவ்விரிவின் மீச்சுருக்கமான விளக்கமாக இருக்கலாம்.

ஸ்தூல மறுப்பு பெற்ற சொற்கள் நிறுவனத்தின் எலும்புக்கூட்டை மட்டுமே அணிந்துகொண்டு நடைபாதையை அலங்கரிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. புதினத்தின் அர்த்த பொருண்மைகளைவிட தனது வசன பூசண வாக்கியமொன்றில் பிரதியின்ஆசிரியர் இதனை நிகழ்த்தியிருக்கும் விதத்தையே மேலாக பாராட்டியிருக்கிறாள் நீலகேசி.

எலினாரின் கதையுலகில்; சோங்ஹாவின் பாடல்களில்;

தன் கண்களில் அதீத கருமை படர்ந்த பிறகே அவள் மெச்சத்தகுந்த பாடல்களைப் பாடினாள் என்று 'பன்சோரி' என்ற பாடல்களின் மூலம் கதை சொல்லும் கொரிய நாட்டுப்புறக் கலையை கேட்டறிந்த சமயத்தில் நீலகேசி சிறிய குறிப்பாக விட்டுச்சென்றதை சக விந்தின் துணையுடன் அறிதல்.. எலினாரின் கதை சொல்லல் முறைமையோடு ஒத்துப்போகின்றதாக நவீன விந்தின் வாசகங்கள் தெரிவிக்கின்றன.

சோங்ஹாவும் எலினாரும் ஒரே பிரதிமையின் இருவேறு பக்கங்கள். 'எலினாரின் வெண்ணந்தகம் - சோங்ஹாவின் கரும்பரப்பு' என்ற படிமம் வாழ்வின் நெடிய சாராம்சம் என்பதே நீலகேசியின் கருத்து. காமத்தை அதன் இடையூறை வலியுறுத்தி ஆகச்சிறந்த படைப்பொன்றை சாத்தியப்படுத்திவிட ஏங்கும் இரு கலைஞர்களின் நிறைவேறிய லட்சியம். ஆதலால்தான் எலினாரின் கதை பெரும்பரப்பில் பல தர்க்க சம்பாஷணைகளுடன் விளிம்பின் எளிய வாழ்வை விவரிக்கின்றது. ஆதலால்தான்  சோங்ஹாவின் பாடல்கள் பிரபஞ்ச லயத்தில் ஒன்றுகலக்கும் பிசிறற்ற பாடல்கள்;  பாமர வாழ்க்கையாய் வெளிப்படுகின்றது.

இயற்கையின், அரூப சிதைவின் துல்லியங்கள் இசைந்து வர காமம் துறந்த எலினாரும், சோங்ஹாவும் பிரதிஆசிரியரின் தூண்டுதலற்று வாசகனிடத்தில் வந்து சேருகிறார்கள்.

அனுபவம்/நிரூபணம் - உடல் - குறித்த உரையாடல்களில் முடிவுறும் தாண்டவராயன் சரித்திரம் எலினாரின் கதைகளுக்குள் உலவும் மனிதனின் தேடலின் வழியே சரித்திரத்தின்  ஆரம்பமான அபௌருஷேயமான நாட்டார் பாடலில் துவங்குகின்றது என்பதாக நீலகேசியின் கடைசி வசன பூஷண வரிகள் நமக்குச் சொல்கின்றன. ஏன் என்றுதான் கேட்பாரில்லை.

வனமோகினி - எலினார் - செல்லி -
நீலகேசியாகிய நீலகேசி வனதி-
சக விந்தணுக்கள்



ஆதியின் முகமையில்
வேருண்ட நிலம்
பதுங்குகுழியில்...

சருகு மரம் விதை
சுழற்சியில் யாவும்

அந்திம கால கருணையாய்
மனம்
ஓர் அரூப யுவதியை இம்மண்ணில்
ஜனித்து எடுக்கிறது...

(வசன பூசணம் நிறைவுப்பாடல்.)

---------------------------------------------

நா.வானமாமலை தொகுத்த கூத்துப்பாடல்களுள் காத்தவராயன் கூத்துப் பிரதி முக்கியமானது. அவர் அந்த  கூத்துப்பிரதியில் ஏற்கனவே உருவாகியிருக்கும் சில கருத்துப்பேதங்களை மறுதலிக்கிறார். வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கும் முன்னுரை ஒரு கூத்துப்பிரதியின் பிரதான செயல்பாடு எவ்வாறு அமையவேண்டும்; படைப்பின் நோக்கம் எதைக்குறித்தது போன்ற கேள்விகளுக்கு மறைமுகமான வழிமுறைகளைத் தாங்கியிருக்கும்.

சமூகக்குழுக்கள் தங்களுள் உருவான சாமானிய ஆளுமைகளின் வழிபாட்டு வடிவங்களைப் பிரதிபடுத்துகையில் கையாளவேண்டிய கவனத்தை நா.வானமாமலையின் இக்குறிப்பிட்ட கூத்துப் பாடல் தெளிவாக்குகின்றது.

இதை மையப்படுத்தி தாண்டவராயன் கூத்தினை அணுகும்போது நா.வானமாமலையின் கூத்து குறித்த சிந்தனைகளோடு ஒன்றிப்போகிறதெனலாம்.

கோணய்யன் மறைவும், உடற்பாகங்களால் ஊர்களை எரிக்கும் கதைப்பாடல் பகுதியும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கூத்துப்பாடலும் புனைவின் நிழலோடு நாட்டார் மொழியை மெருகேற்றிய விதத்தில் ஆதார கூத்துப் பாடல்களைவிட தனித்திருக்கச் செய்ய, சுவிசேஷ வசனங்களின் இணைப்பு கதைப் பகுதியின் உபவிளக்கமாய் தொடர்ந்து வர, 'மேலோட்ட விவரணப்படி' எலினாரின் கண் நோய்க்கான மருந்தினை தேடி அடைவதை சிக்கலில்லாமல் விலக்கி வைக்கும் உயிரோட்டம் 'புதின - நாட்டார்' மொழியும், சிந்தனை சக்தியும்.

இதை வெளிப்படையாக இல்லையென்றாலும்  நண்பர்களிடத்தில் பேச்சுப்போக்கிலாவது ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.

தமிழில் அத்தகைய முதிர்ச்சியான நிலை இந்நாள் வரை உருவாகவில்லை.

(தாண்டவராயன் சரிதத்தை புதிய பிரதியென்றே உச்சரிக்கும் நீலகேசியின் "சொற்களற்ற நூல்" அல்லது அவள் தன் இறுதி காலத்தில் அவசர அவசரமாக எழுதிய "வசன பூசண வாக்கிய கதை" என்ற வெளிவராத புத்தகத்தின் சில பகுதிகளிலிருந்து)

இந்த ஜீவன், சக விந்தணு நீலகேசியின் "வசன பூசண வாக்கிய கதை" - யின் மீத பகுதியின் தேடலில்...