Pages

Sunday, July 23, 2023

புனைகதையுருவாக்கம்

முதலில் காட்சியுரு செய்த ஒன்றை மொழியின் வடிவில் பார்ப்பது ஒருவகைப்பாடு. 

மொழியை மட்டுமே பிரக்ஞையாக வைத்து எழுதுவது மற்றொரு வகை.

சொல்ல வந்ததை சாதாரண மொழிக்குள் வைத்துவிட்டு ஆங்காங்கே அசாத்திய தருணங்கள் தன்னியல்பாக உருவாகி வருவது இன்னுமொரு வகை.

புதுமையான சொல்முறை உத்தியில் கதைகளாக்குவது, தன்னனுபவ கதைசொல்லல், மேட்டிமை வெளிப்பாட்டு புனைவெழுத்து, வாசிப்பின் தாக்கங்களில் பிரதிபலித்தலாக அல்லாமல் முழுமையாகவே போலச்செய்தல் முறை, நூலாக்க/ எழுத்தாள பிம்ப ஏக்கத்தோடு ஆர்வமிகுதியில் எழுதப்படும் படைப்பு என அனைத்து சிந்தனை நோக்கோடு எழுதப்படும் படைப்புகளும் மேற்கூறிய ஏதேனுமொரு கூறுமுறையைப் பின்பற்றி படைக்கப்படும். இதில் சில விடுபடல்களும் இருக்கலாம்.

நவீன தமிழ் இலக்கிய உலகில் பல படைப்புகளும் வாசிக்கப்படாமல் தாமதமாக கவனம் பெறுவதும், எழுதப்பட்ட ஆரம்ப நிலையிலேயே பரவலாக கவனம் பெற வைக்க அனைத்து முயற்சிகளும் நடைபெறுவதுமாக இருவகை வாசிப்பியல்புகள் உள்ளன.

முழுமுற்றாக எழுத்தாளரின் எழுத்து நேர்மையால் உந்தப்பட்டு தீவிரமான கலையாக்கத்தைக் கொண்டாடுவதும், நட்புவட்ட எழுத்தின் மீது விமர்சனமற்ற பார்வையோடு அணுகுவதும், போற்றுதல் மூலம் தன்னெழுத்தை முன்னிறுத்த முனைவதுமாக படைப்பைக் கொண்டு சேர்ப்பதில் பலவகைகள்..



கூட்டு நனவலி அச்சம்

அநேக துர்நிகழ்வுகளின் கூட்டு நனவிலி உளவியல் நுட்பமான பயத்தை விநோத வடிவில் கொண்டுள்ளது.

 எல்லா நேரங்களிலும் அதிகாரத்தின் வட்டத்துக்குள் மிகவும் வசதியாகவும் அனைத்து விதங்களிலும் சிறப்பாகவே இருப்பர். இத்தகைய வாழ்வியலில் வெறுப்புணர்வின் வழி உருவான பயம், அழித்தொழிப்பை கண்மூடித்தனமாக வரவேற்கும்.

பெரும்பாலான இனப்படுகொலைகள், சாதிய வன்கொடூரங்களின் காரணங்களுள் ஒன்றாக நனவிலி மனதிலுள்ள பயம் என்ற உளவியல் உள்ளது.

காலனியா? சேரிப்பகுதியா? வேற்று மதத்தவர் வசிக்கும் பகுதியா? அரசுக் குடியிருப்பா? இவ்விடங்களின் ஒவ்வாமை உருவாக இதே அச்சவுணர்வும் ஒரு காரணம்.

காலகாலமாக பழக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால் ஆழ்மனதில் சேகரிக்கப்பட்டு ஒவ்வாமையாகவும் , வெறுப்புணர்வாகவும் வெளிப்படுகிறது.

அதிலிருந்தே கருத்தியலும் கட்டமைக்கப்படுகிறது. 

அப்பட்டமாக வெளிப்படுவதைவிட,  பதியப்பட்டு ஒளிவுத்தன்மையோடு இருப்பதாலேயே நனவிலி அச்சம் ஒரே நேரத்தில் ஆபத்தானதாகவும், சிந்தனையின்மையோடும் செயல்படக்கூடியது. 

பல உதாரணங்கள் சொல்லலாம். சமீபத்திய மணிப்பூர் இனப்படுகொலைகள் நிகழ்வதில் நனவிலி அச்சம் பெரும்பங்கு வகிக்கிறது. 

 சட்டமுறைமையோடு கையாளப்படவேண்டிய நிலமும் அதன் உரிமையும் கலவரமாக வடிவம் பெற பாசிசம் உருவாக்கிய கூட்டு சமூக அச்சம் அசாதாரணமானது.

நீண்ட கால வரலாற்றில் அடிப்படைவாதம் உள்நுழைந்தால் இத்தகைய பேராபத்துகளே நிகழும்; என்றென்றைக்குமான உண்மை.

நனவிலி அச்சம் காரணிகளுள் ஒன்றுதான், தீவிர உரையாடலுக்குள் கொண்டுவரவேண்டியது. பார்ப்போம்....

Wednesday, July 19, 2023

யதார்த்தவாத கதையாடல்

புனைகதைகளை மாய யதார்த்தவாத,  பின்நவீனத்துவ கோட்பாடுகளாக அதன் பின்னணியிலிருந்து உரையாடல்களை விரிவாக்குவது ஒருபுறமிருக்க அதே படைப்புகளை யதார்த்த பரிமாணங்களுக்குள் கொண்டு வருவதும் பிழையல்ல. பா.வெங்கடேசனின் கதைத்தொகுப்புகள் கோட்பாட்டுவாதங்களுக்குள் விமர்சகனை எளிதாக சிக்க வைப்பதை அங்கொன்று இங்கொன்றாக எழுதப்படும் கட்டுரைகளின் மூலம் கிடைத்தாலும் படைப்புக்குள் நேராக, சூட்சும லாவகத்தோடு எழுதப்பட்டு வாசிக்கப்படும் யதார்த்தங்களை வாசிப்பின்போதே பிடிபட நேர்வதும், உருவாகிக்கொண்டிருக்கும் தருணங்களும் ஏராளமானது. பாகீரதியை அவரது உறவினர் வசைபாடி வீட்டிற்குள் சேர்க்காமல் துரத்திவிடுவார். உறங்காப்புளியோடு வெளியேறும் பாகீரதிக்கு வேறொரு காலத்தில் கனவுகளுக்குள் யதார்த்தம் படிந்து ஒருவித எதிரியக்கத்தை ஏற்படுத்திவிடும். பௌதீக இன்மையும் பாகீரதியின் இருப்பும் ஒரே யதார்த்த உலகில் நிகழும் இருவேறு மாயங்களாக இல்லாமல் காலப்பின்னியக்கமாகவும் வரலாற்றை நிகழ்த்திக்கொண்டிக்கும் தற்தருண யதார்த்தப் பிரக்ஞைக்குள் உலவும் மனிதர்களின் பிறழ்பட்ட நிகழ்வுகளாகவும் மாறிவிடுகிறது.
இங்கு மனிதர்கள் பிறழ்வதில்லை, அவர்களுடைய யதார்த்தங்கள் சிக்கலாகி பிறழ்ந்துவிடுகிறது. கனவாக ஒன்றை அனுபவிப்பவர்  முரண்களையே  யதாத்தங்களின் பெருமகிழ்ச்சியாக்கி ரசிக்கிறார்.