Pages

Monday, September 11, 2017

தமிழ் தேசியம் நிகழ்ந்த பின்னரும் சாதியமைப்பு இருக்கவே செய்யும். தற்போதைய சூழல் அப்பேற்பட்டது. மறுபக்கம், சாதியை ஒழித்தல் என்ற செயல்பாட்டு முறை நீண்ட காலநிலையைக் கொண்டது. நாளையோ இன்னொரு மூன்று மாதங்கள் கழித்தோ சாதி அழிந்துவிடாது. உலகம் பெருவெடிப்பிலிருந்து சிதறி உயிரியல் தன்மையுள்ள ஒரு புதிய கோளாக மாறியதைப் போல மிக நீண்ட தொடரியக்கத்தை தன்னிடையே கொண்டது. முழுமையாக முடிவுற ஓரிரு நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருக்கும்.

காரணம், சாதியம் ஒற்றைப் படிநிலையான கருத்தியலல்ல. பல நுண் அலகுகளை தனக்குள்ளே சேர்த்துக் கொள்ளும் தன்மையுடையது என்பதால் மிகக் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. முதலாளியம், லிங்கமையவாதம், பேரினவாதம், நிலப்பிரபுத்துவம் போன்றவற்றை மேலும் வலுப்படுத்தக்கூடிய கருத்தியலாக சாதியம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது.

சாதியை ஒழிப்பதற்கான செயலூக்கம் வழிவகையாக/சுழலாக (மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு) சமூக உரையாடலின் பதிவுகளில் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அந்த நினைவுபடுத்துதலினூடே சாதி ஒழிப்பிற்கும், சாதிய உணர்வின் அழுத்தம் ஒன்றுமில்லாமல்போகவும் செய்யக்கூடிய சாத்தியங்கள் பிறக்கக்கூடும். சாதியதன்மையிலிருக்கக்கூடிய உளவியலில் சமூக உரையாடல்களில் நிகழும் ஒலிக்குறிகள் அதாவது சிந்தனைகளாக பண்பு மாற்றமடையக்கூடிய கருத்தியல்கள் (சாதியம் குறித்த உரையாடல்கள் / கருத்துப்பகிர்வுகள்) பதிவுறும்பொழுது முழுக்க முழுக்க அது சாதி ஒழிப்பைப் பற்றியவாறு நிகழுமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

ஏனெனில், ஒலிக்குறிகளே நிகழ்நிலை சப்தங்களாக உருவாகி உரையாடல்களில் பதிவடையும். உரையாடல்கள் சம்பவங்களாக உருப்பெற வைக்கக்கூடிய கருத்தியல்களின் விதைப்பகுதி. இவ்விதைப்பகுதியில் நிகழும் நுண்மையான மாற்றமே படிநிலைகளாக இயங்கிவரும் அனைத்து சமூகங்களின் சிந்தனையாக்கத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். 

அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களாலும், சோ.தருமன், பூமணி போன்ற புனைவெழுத்தாளர்களாலும், டி.தருமராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் வரையிலான கட்டுரை எழுத்தாளர்களாலும் இத்தகைய ஒலிக்குறிகளே மேலும் மேலும் சமூக உரையாடல்களில் வெவ்வேறு காலகட்டங்களில் சேர்க்கப்படுகின்றது.  இதன் நீட்சியே ரஞ்சித்தும். 

மேலோட்டமாக இதை தலித் அரசியல் என்ற சொல்லாடலால் அழைக்கப்பட்டு வந்தாலும் கருத்தியல்களால் பிளவுறக்கூடிய மக்களின் நடுவில் சிந்தனை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்களை இத்தகைய ஒலிக்குறிகள் ஏற்படுத்துகின்றன.

இதனூடாக தமிழ் தேசியத்தைப் புரிந்துகொள்ளுகையில் சாதியோடுகூடிய தேசியத்தையே அது முன்வைக்கிறதென்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறக்கும் ஒவ்வொருவரின் பேராசையாக மாற்றப்பட்டுவிட்ட சாதி இந்துக்களிடமிருந்து வெளிப்படக்கூடிய தலித் அரசியல் ஒரு வகையில் நிகழாதபட்சத்தாலும் ஒவ்வொருமுறையும் அக்குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே பேசவேண்டிய கட்டாயத்தினாலும் தலித் அடையாளத்திலிருந்து விடுபடாமல் சமூகப்பிரச்சினைகளில் அதில் ஒன்றான சாதியத்தைப் பற்றியும் நினைவூட்டவேண்டியதாகிவிடுகிறது. 

இதன் பின்னணியில் சாதி ஒழிப்பு குறித்த தொடர்ந்த உளவியலியக்கமான மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு மட்டுமே செயல்படுகின்றது என்பது நுண்மையாக மறைந்துள்ள காரணம். இங்கு மீண்டும் பலமுறை வலியுறுத்தப்படும்போது அதற்கான குரல் ஓங்காதபட்சத்தில் எதிர்நிலை கருத்தியலால் சாதியம் எப்பொழுதும்போல தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும்.

ஆதலால், சாதியற்ற தமிழ் தேசியம் கடினமானது. அதிகபட்சம் கா.சிவத்தம்பி யாழ்ப்பாண சமூகத்தை ஆராய்ந்து அதன் சமூக அமைப்பிலுள்ளபடி கட்டுப்பாடுள்ள சாதிகள் (Bound Caste) , கட்டுப்பாடற்ற சாதிகள் (Unbound Caste) [யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் - பக்: 16] போன்ற ஒருவகை பிரிவு (Type)  வேண்டுமானாலும்  ஏற்படலாமே தவிர தமிழ் தேசியத்தால் சாதியத்தை ஒழிப்பதென்பது யதார்த்தமானதல்ல.

சாதி ஒழிப்பு சார்ந்த சிந்தனைப்போக்குகள் முதலில் சாதி இந்துக்களிடமிருந்தே உருவாக வேண்டும். அதுவே சாதி ஒழிப்பின் முதல் படியும், ஆக்கப்பூர்வமான நகர்வும். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பட்ட சமூக அவநம்பிக்கைகளின் தொடர் உரையாடல்களில் சாதியத்தையும் இணைத்தே பேச வேண்டும். சமூகத்தில் இதன் பதிவுகள் கடத்தப்படும்பொழுதுதான் சாதியத்தை முழுமையாக தகர்த்தெறிய வாய்ப்பு ஏற்படும்.

அதற்கான நம்பிக்கை தற்போதுவரை  இல்லை என்பது பெரும்பாலானவர் அறிந்திராத ஒன்று.

Saturday, September 2, 2017

அதிகார மையத்துக்கு எதிரான தோல்வியால் நிகழும் தற்கொலைகளை அர்த்தப்படுத்திக்கொள்வதில் முதன்மையான சிக்கலாக "தனிமனித குணாதிசயம் சார்ந்ததாக வரையறுத்தல்" என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமான கருத்து.

இவ்வழக்கப்பட்ட கருத்தை எதிர்ப்போரில் அனைத்து மாற்றுச் சிந்தனையாளரும் அதற்கு எதிரான பக்கத்தில் நின்றுகொண்டு "வழக்கமான" கருத்தை வெளிப்படுத்தியவரோடு வாதிடுவது பாரம்பரியப்பட்டதல்ல. புதுமையானது.

நூறாண்டுகளுக்கு முன்னர், தன்னை மாய்த்துக்கொள்ளும் ஒருவரின் மரணத்தைப் பற்றிய உரையாடல்களில் "வழக்கமான" சிந்தனை முறையின் விகிதமே மேலோங்கியிருந்தது. ஆனால் இன்று அதன் சாத்தியங்கள் நவீனப்பட்டு விரிவடைந்திருக்கின்றன.

தனிப்பட்ட குணாதிசயங்களை குறிப்பிடுவோரின் கருத்துப்படி மரணித்தவர் குற்றமிழைத்தவராக புரிந்துகொள்ளப்படுகிறார். தடைகளை மீறி வாழ்வதற்கு முயற்சிக்காமல் கோழையாகவும், பொறுப்பற்றும் தன்னைத் தானே கொலை செய்துகொள்வது என்பது முட்டாள்தனமானது என்றும் அனைத்தையும் தாண்டி வாழ்பவரே முதிர்ச்சியானவர், கல்வி பயின்றவர் என்பதும் இவர்களுடைய சிந்தனை வடிவம்.

தற்கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் முதலும் முடிவுமாக பாதிப்படைந்தவரே குற்றவாளி என்ற விதத்தில் யோசிக்கும் பொதுமனம் இவர்களுடையது.

இதற்கு எதிர்ப்புறமுள்ள மாற்று சிந்தனைக்காரர்கள் தற்கொலைக்கான காரணம் சமூக அரசியல் தொடர்பாக இல்லாத பட்சத்திலும் வேறு எந்த தனிமனித காரணங்களிலும்கூட "வழக்கமான" கருத்தியலாளர்களின் சிந்தனைப் போக்கை ஏற்றுக்கொள்வதில்லை. 

அதாவது, ஒரு ஆண் அல்லது பெண் காதல் தோல்வி/கடன் தொல்லை/மானபங்கம்/இழிவுபடுத்துதல் போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டாலும், தற்கொலை செய்துகொண்டவரையே குற்றவாளியாகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக துயரத்திலும் அதற்கான ஆறுதலிலும் பங்குகொள்கின்றது.

தற்கொலை சம்பவம் ஒரு சமூக அரசியல் பின்னணியில் நிகழும் பட்சத்தில் "வழக்கமான" சிந்தனைப்படி தற்கொலையாளனே குற்றவாளி என்பதை தீவிரமாக எதிர்ப்பதோடு தற்கொலைக்கான உண்மையான காரணங்களாக விளங்கும் அரசு இயந்திரம் அதனோடு சேர்ந்தியங்கும் முதலாளியம், சாதியம், நிலப்பிரபுத்துவம், உலகமயமாக்கம் போன்ற கருத்தியல்களை மிகவும் பலமாக எதிர்க்கின்றது.

சமூக-அரசியல் பின்னணியில் நிகழும் தற்கொலைச் சம்பவங்கள் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்ட கொலை என்பதே மாற்று சிந்தனையாளர்களின் ஆழமான நம்பிக்கை. மிகவும் சரியான நம்பிக்கையும் கூட. 

அனிதாவின்  இறப்பிற்கு முன்பிருந்து தற்கொலை வரை தற்கொலையின் இயக்கத்தை கீழுள்ளவாறு சொல்லிப்பார்க்கலாம்.

அனிதா --> உயிர்நிலை இயக்கம் 

மருத்துவர் --> பண்பாட்டு மேலாண்மை நிலை 

நீட் --> முதலாளிய அலகு

தற்கொலை --> உச்சபட்ச எதிர்ப்பு

உச்சபட்ச எதிர்ப்பின் முடுக்கம் --> அதிகார மையம்

இந்த தொடரியலில் அனிதாவின் ஒரே கனவாக இருந்த மருத்துவர் பட்டம் அதிகார மையத்தால் மறுக்கப்படுகிறது. மருத்துவர் என்ற பட்டத்தை அனிதாவின் கண்ணோட்டத்திலிருந்து வெறும் பொருளாதார மூலமாக (Economical source)  மட்டுமே பார்க்க முடிவதில்லை. தன்னைச் சூழ்ந்திருக்கும் தன்னோடு சேர்ந்த சனங்களின் பண்பாட்டு உயர்வாகவே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலாளிய அலகுகளின் உலகளாவிய பண்பு உயிர்நிலை இயக்கங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் அபகரிப்பதுமேயாகும். இதை செயல்படுத்த மத்திய/மாநில அரசுகளின் தொடர்பு தேவைப்படுகிறது. 

காடு, மலை, ஏரி, கடல், நதி, நிலம், மனிதன் போன்ற உயிர்நிலை இயக்கங்கள் எப்பொழுதும் முதலாளியத்தின் கட்டுக்கோப்பிற்குள் இருக்க வேண்டும் என்பதே அனைத்து அரசுகளின் ஒரே கடமை.

ஆகவே, முதலாளியத்திற்கு எதிராக போராடிய உயிர்நிலையை ஒடுக்கும்பொழுது முதலாளியத்திற்கு வெற்றி கிடைக்கின்றது. 

இங்கு நீட் என்ற அலகு தன்னை எதிர்க்கவரும் உயிரியக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இதனை இயக்கும் மத்திய அரசு முதலாளிய வன்முறையாக அனிதாவை படுகொலை செய்து தனது தடையின் முதல் சிறுகல்லை தூக்கி எறிகின்றது. அனிதாவின் பக்கத்திலிருந்து வெளிப்படும் உச்சபட்ச எதிர்ப்பாக உயிரியக்கத்தின் தொடர்நிலை முடிவுறுகின்றது. இதற்கான தூண்டுதல் அதிகார மையத்திலிருந்து அனிதாவிற்கு கடத்தப்படுகின்றது.

மேலும் தொடர்ந்த ஆய்வியல் தரவுகளிலிருந்து கண்டுகொள்ளப்படவேண்டிய துல்லியமான காரணங்களை,  பொதுமனம் எளிதாக தற்கொலை செய்துகொண்டவரின் மீதே அனைத்து பழிகளையும் சுமத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் இரண்டு.

சமூக காரணங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களை குறைகூறுபவர்களின் சிந்தனை வடிவத்தில் சாதியம்/முதலாளியம்/அதிகார பண்பு போன்றவையும் ஒன்றிணைந்திருப்பதினால்தான் பொதுமனத்தின் கருத்தினை எதிர்க்க நேரிடுகின்றது என்ற மாற்று மனத்தின் கருத்தியலை அறியாமல் இருப்பது முதல் சிக்கல்.

அதாவது அனிதாவின் தற்கொலையில் முதலாளியமும், அரசதிகாரமும், சாதியமும் நீட் என்ற வடிவில் தொடர்பில் இருந்து வந்திருப்பதால் அவருடைய மரணத்தில் அவரையே குற்றம் சாற்றுபவரும் அரசின், சாதியத்தின், முதலாளித்துவத்தின், நிலப்பிரபுத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள் என்ற உண்மையை உணராது போவது.

இரண்டாவதாக, அவர்களுடைய அறியாமையை அப்பாவித்தனம் என்று ஏற்றுக்கொண்டு விலக முடியாமல் போகும்  மாற்று மனத்தின் தவிப்பு. 

வழக்கமான மன அமைப்பு காலவெளியில் கலை இயக்கங்கள் சமூகங்களோடு தொடர்புகொள்ளும் விகிதாச்சாரம் உயரும்பொழுது தன்னை திருத்திக்கொள்ளும் என்பது என் நம்பிக்கை.