Pages

Sunday, October 1, 2023

மூக்கன் சரிதம்

<செம்மையுறாத பிரதியிலிருந்து>




திரிசிரபுரம் - பால்வீதியின் நுண்மைக் கண்களால் அளந்து வைக்கப்படாத அதன் வரகனேரிபாளையம் தூமைக் குடிசைப்புறமென்று அழைக்கப்பட்ட வாழ்நிலத்தின் மண்பரப்பில் அமர்ந்து கற்கள் எறியும் குரங்கின் மீது தடிகொண்டு தாக்கியவர்களின் வீச்சில் இரத்தம் சீறிப் பாய்ந்த அகோர கதை - இதுகாறும் வெறும் கதையொன்றை, அவள் தன் கைகளோடு மார்பகங்களையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டதினை அவதானித்தவர்களை கண்ணுற்றபொழுது எதிர்புற வண்ணச் சுவரில் வங்கியின் வட்டிசார் விளம்பரத்தில் மரத்தின் கிளைகளில் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் வால் விலங்குகளில் ஒன்றின் மீது சிகப்பு வர்ணத்தில் ஆடை போர்த்தியபடி வரையப்பட்டிருந்த கதையென்ற அனுபவத்திலிருந்து அவனை தூக்கி எறிந்த ஒரு ஓவியத்தை யதேச்சையாகப் பார்த்தவனின் நினைவென்னும் மென்னுடலின் மேல் கத்தி வைத்து இழுத்த உணர்வெழுந்தது.

மேலும் கீழும், கிடைமட்டமாகவும், சகல இடங்களிலும் அரை மணிநேரமாக அந்த விளம்பரத்தைப் பார்த்தவன் ஓவியத்தின் வலது/இடது ஓரங்களில் கிறுக்கலான கையெழுத்து அல்லது அப்படி வேறு ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். காண்பதற்கரிய தொல்சிற்பமொன்றைக் கண்டதைப்போல இருந்தது அவனுக்கு. நான்கைந்து குரங்குகளில் சிகப்புநிற துவாலையால் போர்த்தப்பட்டதைப் பார்க்கும் நிமிட கால வரையறையில் மனதில் இருந்த பதற்றம் நீர்க்குடுவையில் செலுத்தப்பட்ட இராசயனத்தைப்போல உடலெங்கும் ஊர்ந்து பரவுவதை கைகளில் ஏற்பட்ட பெரும் நடுக்கம் அவனுக்கு உணர்த்தியது. 

பல கோணங்களில் ஒரு முப்பது நாற்பது முறை தன் ஆடம்பர அலைபேசியில் ஒளிப்பழத்தை விடுவித்தும், இயக்கியும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினான். புகைப்படமெடுக்கும் சமயம் கைகளும், அவனுமாய் சாமியாட்டம் ஆடியதைக் கண்டவர்கள் என்றுமில்லாத அவனுடைய ஒவ்வொரு செய்கையையும் மந்திரத்தால் சாகசங்கள் செய்பவனைப் பார்க்கும் பார்வையாளர்களைப் போல விநோதமாகவும், இயல்பின்மையின் கோடியில் தாங்களும் ஒருவராய் சேர்ந்துவிட்ட கதையால் அதிசயப்பட்டுப் போனவர்களுமானார்கள்.

இவ்வுலக உணர்விற்கு வர அவகாசம் பிடித்த அவன் உள்ளுணர்வை குறை கூறினான். விரைவாக அந்த இடத்திலிருந்து கிளம்பி வார விடுப்பு பெற்று அவன் வழக்கமாகப் பயணம் செய்யும் குளிரூட்டப்பட்ட பேருந்துக்காக காத்திராமல் அரசுப் பேருந்தொன்றில் ஊருக்குப் புறப்பட்டான். அலுவலகத்திலிருந்து நேராக விடுதிக்குச் செல்லவில்லை. விடுதியில் உடன் தங்கியிருக்கும் நண்பர்களிடம் கூட சரி, ஊரிலிருக்கும் அம்மையப்பனிடமும் தான் வருவதாய் எந்தவொரு தகவலும் சொல்லவில்லை. அவசரமிகுதியில் என்ன செய்வதென்று அறியாதவனைப் போல, யாரோ நெருங்கிய உறவினரொருவர் தவறிவிட்டதைப் போல இருந்தது அவன் அலுவலகத்திலிருந்து அன்று கிளம்பிச் சென்றது. 

திரிசிரபுரம் - திருச்சினாபோலியாகி பின் திருச்சிராப்பள்ளியென்ற பெயர்பெற்று - இன்று திருச்சியாகச் சுருங்கிய கதை வரை ஒருவேளை இதுவும் அதுபோல முடியாத கதையாக நீளும் ஒரு மர்மத்தைக் கண்டறிந்த தருணமே பேருந்துப்பயணம் முழுவதும் அவனை ஆக்கிரமித்து ஊரடைய வழி செய்தது. பேருந்திலிருந்து இறங்கியதும் வீடடையவில்லை. யாரை அவன் சந்திக்க வேண்டி கிளம்பினானோ அவன் முகம் மாலை வெயிலின் நித்திய ஒளியில் வெளிக்கிளம்பும் நிறைமதியினைப் போல் வழியில் பட்டது.

ரகசியம் தாங்கிய கண்களில் சிரித்தான்,  வருகைப் பதிவெட்டுக்காக இருப்பை அறிவிப்பதைப் போல வலது கை உயர்ந்தது ஐயப்பனை நோக்கி.

நீண்ட நாட்களுக்குப் பிறகான பாரம்பரிய விசாரிப்புகள் ஏதுமில்லாமல் நெருங்கி சாதாரணமான குரலில்,

"நான் மூக்கனைப் பார்த்தேன்" என்றான்.

வியப்பின் நிழல் பட்ட கணம் ஐயப்பனின் மனமெங்கும் சூடேறின. திகைப்பென்பதும் கூட பேயைக் கண்ட பயமாகி அவனைச் சூழ்ந்தது. அந்த பயம் அவன் முகத்திலும் படர்ந்தது. அப்பொழுது அவர்களிருவரும் ஆசுவாசமடைய குறைந்தபட்சம் ஒரு தேநீர் அத்தியாவசியமாகிப்போனது.

***

காலஞ்சென்ற கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் வரகனேரி பகுதியில் தங்கி எடுபுடி வேலை மட்டுமே செய்யக்கூடிய மூக்கனை சந்தித்தும், அவனிடமிருந்து பெற்ற சில தகவல்களின் அடிப்படையிலும் பழமையுள்ள கொத்தாலத்தான் கோவிலின் தம்படி உருப்படியில்லாத காப்பு கட்டும் உரிமையை அவனுக்கு இந்த முறை பெற்றுத் தருவதாகவும் நம்பிக்கையளித்திருந்தார்.

அதன்படி தன் சகல பரிவாரங்களுடன் அவரை சந்திக்க பெரிய சௌராஷ்ட்ர தெருவின் எல்லைக்கு வந்த சேதி கேட்டு மளிகைக் கடை இரத்தின பிள்ளை, ஐயாவின் தயவின்றி என்னால் யாரையும் அனுமதிக்க இயலாதென்றும், மீறி தெருபுகுந்தால் அத்தனை உயிர்களுக்கும் அவர்களே சாட்சியென்றும் சொல்ல மூக்கன் மௌனமாக அனைவரையும் திரும்ப அழைத்தான்.

பணிந்து செல்ல மூக்கன் சாதுவானவனல்ல. கடும் முரடன். வரகனேரி சண்டியன். கண்ணன், சந்திரனாகிய இரட்டையர்களுக்கு பாரிய காலமாய் சிறந்த அடியாளாக இருந்தவன். முன்யோசனையின்றி கை அகட்டுபவன். தேர்ந்த குடியன். உள்ளூர் கிழத்திகள்கூட சாதி வேறுபாடு கடைபிடிப்பதால், நாட்டியமாடும் விராலிமலை பார்ப்பன யுவதிகள் உடல்களுக்குள் ஆழப்பாய்ந்தவன்.

மதுர வெட்டவெளியின் அகன்ற பரப்பில் ஓரமாய் அமர்ந்து சூதாடும் குழுவினரின் புறக்கணிப்பை அர்த்தமுள்ள வசைகளால் கடக்கும் மூக்கன் வரகனேரியின் உயர்குலத்தோர் மட்டுமல்லாது யாவரிடத்திலும் மதிப்பு பெறவில்லை.

மூக்கனிடத்தில் கி.ஆ.பெ.வின் வருகையே பணிந்து செல்ல வைத்தது என்று சொல்லலாம். பகுக்கப்பட்ட சமூகத்தில் அவனை அங்கீகரித்த ஒரே மனிதர் அவர்.

எந்த பகுதியிலிருந்து, எப்பொழுது இங்கு வந்து குடியானவர்கள் என்று மூக்கன் சாதியினரை கண்டறிவது கடினம். பாளையத்துமார் தன் சொந்த சேவைக்காக இருப்பதில் கடைநிலையான அடிமையாகக் கூட விலைபோகாத சிலரை சுத்தமான பகுதியிலிருந்து ஒதுங்கிய வரகனேரிக்கு அழைத்து வந்து குடியும், கூழும் கொடுத்ததாக சொல்கிறார்கள். சௌராஷ்டிரர்கள் முதல் வந்தேறிய லம்பாடிகள் வரை தீர்க்கமான வரலாறுண்டு, மூக்கன் குழுவிற்கு தெளிவாக வரலாற்று புலத்தில் நிச்சயமான தகவல்கள் யாதுமில்லை. அங்கொன்றுமிங்கொன்றுமாய் பிட்டு வைத்த கதைகளே அவர்களது பரம்பரை வரலாறாக பேசப்படுகின்றது.

ஒல்லியான, கூர்மிக்க சிறிய மீனின் முள்ளைப் போன்றதொரு பசைஊசியை மூக்கில் அணிந்திருக்கிறார்கள் என்பதால் மூக்கர்கள் என்றும், ஆண்கள் என்றால் மூக்கா, பெண்கள் மூக்கி போன்ற ஒட்டுப் பெயரைத் தாங்கியும் இருப்பதிலிருந்து பழங்குடி இனத்தின் சாயல்கள் மூக்கர்களிடத்தில் ஒளிந்திருப்பதாக இவர்களை ஆராய்ந்த சில மானிடவியல் அறிஞர்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.

சமூகத்தில் யாதொரு படிநிலையிலும் இல்லாத ஒரு அரூப சமூகம் திருச்சி வரகனேரியில் எந்த பணியிட்டாலும் செய்து எத்தனை குறைவான கூலிக்கும் தலையாட்டி வீச்சமடித்து குப்பையிலெறிவதையும் முந்தானையில் வாங்கி ஆதி விலங்கினங்களைப் போல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இவர்களிடத்திலிருந்து திமிறி தினவடையும் சரண்கொள்ளாத பச்சைப்பூஞ்சானாய் ஏறி நகரும் குணம் பெற்ற ஒருவன் மூக்கன். அவனை விட ஒரு பிரம்மாண்டத்தின் அதிரகசிய பிறவியான சில நேரங்களில் ஆத்திரமாகவும், பல நேரங்களில் அரவணைத்தும் அவன் பழகி வளர்த்த குரங்கு. ஊரிலுள்ளோர் மற்ற பிறரும் அதே சாதிக்காரரும் மூக்கன் குரங்கென்றே அழைத்து வந்தனர்.

கி.ஆ.பெ. தலையிட்ட நியாயமாதலால் புனித உயர்குலத்தார் எதுவும் சொல்லவோ மாற்றவோ இயலாமல் போனாலும் மூக்கன் சாதியின் பாரம்பரியத்தை மிக இழிவான கதைகள் மூலம் கட்டமைத்தனர். அதன் பேரால் ஓரிரு சுகவிரும்பிகள்கூட எதிர்நிலையில் பயணப்பட வேண்டியிருந்தது. இவையாவும் மூக்கன் வளர்த்த குரங்கிற்கு புரியாத ஒன்றில்லை என்பதே இங்கு அதிசயமும், புதுமையும்.

மூக்கனுக்கு போத்தல் சாராயம் முதல் சிப்பி பீடிக்கட்டு வரை வாங்கி வந்து தருவது மூக்கன் குரங்கின் காரியம். காய்ச்சலுக்கு வெந்நீர் கூட வைத்து தரும் குரங்கு மூக்கனைப் போலவே இச்சமூகத்தினாலும் இட்ட பணிகளை செய்து வந்தது. மூக்கனோடே வாழ்வதால் குரங்கையும் அவன் மூக்கா என்றே அழைத்தான்.

அவன் அதட்டக்கூடிய கோபம் வந்தால் விளாசக்கூடிய ஒரே ஜீவன் அந்த குரங்கு மட்டுமே. ஒருமுறை மூக்கன் குரங்கு கொண்டு வந்த கறியில் உப்பில்லை என்ற வெறியில் கடும் போதையுடன் குரங்கை அடித்து மிதித்தான். உடல் வலிக்க குரங்கு துடித்தது, தவழ்ந்து சென்று மீதமுள்ள சாராயத்தை உறிஞ்சி தள்ளாட்டம் போட்டு வெளியில் ஓடிப்போனது.

ஒருவகையில் குரங்கு போதையை அனுபவிக்க கற்றுக்கொண்டதுகூட மூக்கனின் பொறுமையின்மையால் இருக்கலாம். ஆனால் அதையே சில நாட்களில் பழக்கப்படுத்திக் கொண்டு சரிசமமாக வாழத் தொடங்கியது.

மூக்கனைப் பொறுத்தவரை மனிதனைப் போன்றது அக்குரங்கு. அவனும் குரங்கும் இரட்டைச் சகோதரர்கள் என்பதே மக்களின் கருத்து.

நிலவின் தேய்ந்த ஒளியில் துரைசாமியின் மருமகளுக்கு வயிற்றில் வலி பீடித்ததும் மூக்கன் குரங்கின் தயவால் மருத்துவச்சி விஜயம் செய்தாள். அவள் வாய் திறக்கவில்லை. அடிமட்ட சாதியின் ஏவல்களை கவனிக்கும் மனிதப்பிறவியில்லாத ஒரு குரங்கின் மேன்மையை சொல்வதென்பது அவளைப் பொறுத்தவரை கௌரவமற்ற செயல். ஊரின் பல நல்ல/கெட்ட காரியங்களுக்குப் பின்னிருக்கும் மூக்கன் குரங்கு தீட்டுப்பட்ட சீவனை விட கீழ்நிலையில் வைத்து பார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. தவிர்த்து ஊரார் பழக மறுக்கும் மூக்கனிடமும் அவன் சமூகத்தாரிடமும் அன்பாக நெருங்கி இருந்தவர்களுள் பாஸ்கர பண்டிதரும் ஒருவர். சௌராஷ்ட்ர தெரு குடும்பங்களுக்கு சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்கும் ஒரே நல்ல மனிதர் பாரம்பரியமாய் புழங்கிவரும் உறவுமுறைகளின் மேல் நம்பிக்கையிழந்து மூக்கன் சமூகத்தவரை முதன்முதலாய் தெருவிசயம் செய்ய வைத்தார். முகத்துக்கு முகம் பேசாத சொற்களை பின்புறமாக துப்பினார்கள் அவருடைய பூர்வ விசுவாசிகள்.

மூக்கன் வகுப்பினரின் சடங்குகளையும் முன்னின்று நடத்தியவர் அக்காலத்தில் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு இனத்தவர்களிடையே காழ்ப்பையும், பாராட்டையும் ஒருங்கே பெற்றார். கிறித்துவ மிஷனரியைப் போல மூக்கன் சமூகத்தவரும் அனைத்து வழிகளிலும் சம பாகம் கொடுத்தார். கி.ஆ.பெ. அவருக்கு பக்கபலம்.

இத்தோடு நில்லாமல் மூக்கன் சமூகம் மட்டுமின்றி யாருமே எதிர்பார்க்காத மலைக்கோட்டை சன்னதியின் நுழைவு வாசலில் அவர்களுக்கு சிறப்பு வழிபாடு மட்டுமின்றி சாஸ்திரிகளின் மூலம் அர்ச்சனை ஏற்பாடுகளுக்கும் தயார்படுத்தியது அனைவரையும் உலுக்கியது. கும்பலாக திரள ஆரம்பித்தார்கள். தீவெட்டியுடன் நாலாம் திசையிலும் சங்கங்கள் கூடின. பாஸ்கர பண்டிதரை கடுமையாகப் பழிவாங்கவும், மூக்கன் சமூகத்தவருக்கு தண்டனையாக வரிப்பொருட்களை விதிப்பதையும் குறித்து யோசித்தனர்.

பாஸ்கர பண்டிதர் எதற்கும் அசையவில்லை. அவரை அவர்களுடைய வாழ்நாட்களின் இறுதிவரை நினைத்த எதையும் சாத்தியப்படுத்த முடியாமல் போனது.

இவருடைய நெருங்கிய நட்பாக மூக்கனும் அவனுடைய செல்ல மிருகமும் சுற்றி சுற்றி வந்தனர். மூக்கன் மட்டுமின்றி அவன் சாதிக்காரர்கள் அனைவரும் ஓரளவுக்கு திசை மாறி மனித ஏற்றம் பெற்றதில் பாஸ்கர பண்டிதருக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் பெரியவருக்கு அளப்பரிய பங்கு உண்டு.

No comments:

Post a Comment