Pages

Friday, February 24, 2017

இறந்தவர்களை அலங்கரிப்பவன் - மனித அன்பின் முற்றுப்பெறா வெளி


ஆகச் சுருக்கமாக குழந்தைகளாலும், இயற்கையாலும் ஆன கவிதைகள். வெள்ளந்தியும் மென்மையுமாய் சமூக சிதைவு/அசிதைவுகளின் பிரக்ஞையற்று நகரும் குழந்தைப் பருவத்தின் மேல் ஏவப்பட்ட இரக்கமற்ற துரோகத்தை இக்கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன. 

........
பதிலீடு செய்வதைக் குறித்து 
நாம் 
இன்னம்கூட அதிகமாக 
பேசித் தொலைக்கலாம் 

என்ற சிறிய கோபத்தின் மூலம் இக்கவிதை மொத்த தொகுப்பையும் விவரித்துவிட எத்தனிக்கிறது. கவிதை எத்தனிக்கையில் தன் கால்களுக்கடியில் தெளித்து வீசப்பட்ட எண்ணைப் படலத்தின் மீது கால் பதிய முடியாமல் தவிக்கிறது. அது ஆட்டிசம் பாதித்த சிறுமியின் மேலுள்ள கருணை, அவள் நித்ய சிறுமியாய் நிலைக்க நிகழ்த்தும் "வேறு வழியற்ற" பிரார்த்தனையின் வடிவம். பிரார்த்தனையின் ஆதி சொற்கள் சிறுமியை மீட்டுவிட வேண்டி அல்ல; அதற்கப்பாற்பட்ட ஓர் வேண்டுகோள் மட்டுமே. அவ்வேண்டுகோளே சிறந்த விடுதலையாகவும்..

கவிதை செயலாற்றும் குழந்தைகளின் உலகமும் நிலையாமையை இருப்பாக பெற்றுள்ள இயற்கையும் தொகுப்பின் மூலப்பேசுபொருள்கள்.

இயற்கையின் மீதுள்ள பிரியத்தை கவிஞன் எப்போதும் கவிதை உருவாக்கும் ஓர் மனப்பிரதிமையிலிருந்தே கண்டுகொள்கிறான். ஓவியங்களும், புனைவுகளும் இன்னபிற கலைகளும் ஆக்கித்தரும் அனுபவத்தைவிட அதன் சப்தத்தை கேட்டுணர கவிதையே சௌகரியமானது என்பதாலோ  என்னவோ அவன் சூழலின் மேல் விடுக்கும் குரூரத்தை அறியாத ஓர் வழிப்போக்கனைக் கொண்டு அறிமுகம் செய்கிறான். அதற்காகவே புனைவின் நீண்ட வரலாற்றிலிருந்து ஒரு கொத்து இசங்களை உருவாமல் எளிய கதையாடலில் அதை உரைக்கிறான். 

சிறார்களே யதார்த்த மொழியின் வடிவங்கள். அப்பேற்பட்ட ஒன்றுமறியாத அம்மொழியின் மீதான நோய்க்கூறுகள்,  பிறழ்வுகள் போன்ற இயற்கைச் சிதைவுகளை இயற்கை X சிறார் உலகம் என்ற இருமையின் எதிர்வுகளாக்கி இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவ்வகையில் கவிஞனுக்கே அறியாமல்  நிகழும் எதிர்வுகளின் தாக்கம் சூழலியலின் மேலுள்ள ஆக்கிரமிப்பு (உணவுச்சங்கிலி, புற(ம்) 400, ஒலி மீட்புப் பறவை, பார்வையாளன்,..) என்ற அருவ அறிவியல் தொகுப்பின் ஊடாக இயங்குவதாக நினைக்கிறேன்.

யதார்த்தத்தில் அர்த்தமற்ற ஒன்றை கவிதை ஒரு ஊமைச் செயலைப் போல அல்லது வெறும் பாவனை செய்தலாக பிரதியில் அமைத்து வைக்கிறது. குழந்தைகளின் இழப்பு வெறும் இழப்பல்ல; பேரழிவு என்பதும் பேரிழப்பு என்பதும் பிரதியின் செயல் வலியுறுத்தும் கருத்தின் பின்னணி. இந்த இழை பிரதியில் முரணியக்கத்தோடு நேரடியான, எதிர் கருத்துள்ள இரு மையங்களுடன் ஊடாடும்.

குழந்தை உலகின் நோய்மையும், இயற்கையின் சரிவும் நேரடியான சமூகவியல் படிமங்களேயானாலும், பிரதியின் செயல் என்ற இழை குற்றவுணர்வுகளற்ற இயற்கையின் மீதான தாக்குதலை வெளிப்படுத்துவதின் வாயிலாக அதற்கு நிகரான சிறார் உலகின் குறைபாடுகளை சமன் செய்வதாக உள்ளது. ஈடு செய்தல் அல்லது இணை செய்தல் என்பதன் மூலமாக கவிதை தன்னிறைவையும், திருப்தியையும் அடைவதாக எடுத்துக்கொள்ளலாம். 

அதாவது நிகழ்காலத்தில் மனிதனின் பறத்தல்வாழ்வியலோடு ஒத்திசைந்த பார்வை ஒருபுறமிருந்து எதிர்வின் நேர்கோட்டுத்தன்மையை பிரதிபலித்தால் மறுபக்கமிருந்து கடவுளின் வெற்றிடம், பிரார்த்தனையின் தோல்வி, இயற்கையின் மரணம் போன்ற பண்புநிலைகளோடு உயிர்பெற்ற அறிவியக்கம் குழந்தைகளின் பக்கமாய் நின்றுகொண்டு அவர்களை அரவணைத்து உலகத்தைக் கசக்கி எறியும் சிந்தனை நீரோட்டத்தைத் தாங்கியுள்ள பிரதியாகவும் வாசிக்கப்படும் வாய்ப்பு தற்செயலாகவே இத்தொகுப்பில் உருவாகியுள்ளது. ஒரு தராசைப்போல வடிவமைக்கப்பட்ட ஸ்தூலப் பிரதியிலிருந்து உருவாக்கப்படும் சூக்குமப் பிரதி.

இந்த ஒரே ஒரு தன்மையே இறந்தவர்களை அலங்கரிப்பவன் தொகுப்பின் கவிதைகளின் இரட்டைக் குழந்தைகளை வாசகனிடம் அறிமுகம் செய்து கையளிக்கின்றது. சிறார்களின் மேல் ஏவப்படும் வன்முறை, இயற்கையின் மேல் நிகழும் வன்முறை என்பவை முதலில் வெளிவந்த நேரடியான "அர்த்தவசதியுள்ள" ஸ்தூலக்குழந்தையாகவும் இரண்டும் சமதளத்தில் நிற்கும் சமயம் ஏதுமற்று தன் பருவத்தைக் கடந்திட நம்பியிருக்கும் பிஞ்சுக்கூட்டத்தை நோக்கி இயற்கையும் அதன் சகல காரணிகளும் பிரயோகிக்கும் வன்முறையின் மீதான பழிதீர்த்தல் மற்றுமொரு "அர்த்தசாத்தியமுள்ள" சூக்குமக்குழந்தையாகவும் உருப்பெறச் செய்துள்ள சூக்குமத்தின் பிரதியே இறந்தவர்களை அலங்கரிப்பவன் என்ற வார்த்தைகளின் அர்த்ததளமும் மனித அன்பின் முற்றுப்பெறா வெளியும்.  

No comments:

Post a Comment