Pages

Friday, April 1, 2016

தலித்தியலில் பொருளாதாரம்

மேற்கோப்பு பாதிப்பினால் அமையும்  அடித்தளத்தில்  பொருள் சார்ந்த பகுதிகளின் கனத்தை வலுப்படுத்தவேண்டிய கட்டாயம் தலித் வகுப்பினருள் உருவாகியுள்ளது. தான் செயல்படுத்தியவற்றால் இனமேன்மையடையும் உணர்வு அறிவுடைமையற்றதென்ற பிரக்ஞைபூர்வ அர்த்ததளங்களை  பிற்படுத்தப்பட்ட இடைநிலை சாதிகளுக்குள்  உருவாக்க வேண்டிய கடப்பாடுகளையும் இப்போது உணரமுடிகிறது. இவ்விரண்டும் ஒரு இருநூறாண்டுகால செயல்திட்டம் என்ற மேம்போக்கான அரசியல் வரையறைகளாக வறித்துக்கொள்ளாமல் சமூக இயக்கங்களின் அறிவுக்கூறுகளுக்குள்ளிருந்து துவங்குவது பொறுப்புமிக்க செயல்முறையாக அமையும்.
 
இந்தியா என்ற தேசமும் அதன் கல்வியும் வரலாற்றை நமக்கு மதப்பின்னணியின் அடிப்படையில் அறிமுகம் செய்கிறது. சுதந்திரப் போராட்ட கதைகளும் கதை வீரர்களினது வரலாறும் சாதி மத அடிப்படையில் உள்ளன. "சோசலிஷ நாடு" என்ற எளிய புரிதலுக்குள் அடங்காத ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாத இத்தகைய சமய தத்துவ சிந்தனைகள் நாட்டின் கருப்பொருளிலிருந்து சற்று விலக்கிவைக்கப்பட அங்கு நேர்ந்த தலைமை ஒரு காரணம்.
 
நிலைமை இப்படி இருக்க,  கொடிகட்டிப் பறக்காத எந்தவொரு அமைப்புக்கும் இங்கு கடைசி இடம் அளிக்கப்படுகிறது. தற்போதுள்ள கதியில், இங்கு சாதியை வேரோடு சாய்த்து, சாதீயத்தை ஒழித்து சமத்துவம் நிலைநாட்ட செய்யப்படுகின்றவை உபயோகமானதாக இல்லை.  அதற்கு கொடிப்புண்ணியம் தேவை. கொடி விசாலமாக காற்றில் பறப்பது அவசியம்.
 
இவைகளை மறுத்தே செயல்பட்ட பெரியார் போன்றவர்கள் ,  தங்களுடைய காலத்தில் சமூக அந்தஸ்து ஒன்றினை மட்டுமே அதிகமாக முன்மொழிந்தனர்.  பொருளாதார அறிவியலில் உயர்ச்சி அப்போதைக்கு தேவையாக இருக்கவில்லை.
 
பறையனான  தாத்தா, சம மரியாதையோடு, நாகரிகமாக நடத்தப்படுவது இன்றைய தலித் பேரனின் பெருமையாக உள்ளது. பெரியார் இதில் கன மாற்றங்களுடன் வெற்றி கண்டவர். அவரளவில், அப்போதைய சமூக அபத்தங்களை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு மிகப்பெரிய தலித்திய விடுதலையாக எடுத்துக்கொள்ளலாம்.
 
இதற்கு மிக நெருக்கமான  பிந்தைய அரசியல் நிறுவனங்களில், இன அமைப்பை ஒட்டிய வாக்கு அமைப்பு பூதாகரமாக உருவானது. முற்றிலும் சமூக அந்தஸ்து மட்டுமற்று பொருளியல் ரீதியிலமைந்த இடத்தைக் கணக்கில் வைத்தும் இது நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய குணாம்சங்களுடன் கூடிய சோஷலிசம் ஏற்படவில்லை.

இதன் கண்ணியாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித் கொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
 
என்னளவில், அண்மையில்  நிகழ்ந்த மாணவர் சங்கரின் கொலை சிந்தனைக்குட்பட்ட பலத்த அதிர்ச்சி உணர்வை சமூக உளவியலில்  உருவாக்கவல்லது.
 
தொலைக்காட்சிகளின் பொது நிகழ்ச்சிகளிலும், தினசரிகளிலும் சம்பவம் நிகழ்ந்து வெளிக்கொணரப்படும் பாதிப்பு நிலைக்கும் நேரலை போன்ற பதிவிற்கும் அனேக வேறுபாடுகள் உள்ளன. ஓரிரண்டு நாட்களில் மறந்துவிடக்கூடியதாக கைவிடப்படும் வகையில் சிறப்பாக தகவல் தொழில்நுட்பம் அமைந்திருப்பதை மீறி இதை மேற்கொண்டு பேசி இதை ஒரு கயிறுபோல் பற்றியிருக்க வேண்டும்.
 
பொருளாதாரத்தில் பின் தங்கிய சங்கரின் குடும்ப அமைப்பு, சாதி வன்முறையால் பாதிக்கக்கூடிய சூழலில் இருப்பினும் , முற்பட்ட  வரலாற்று மாற்று தகவமைப்பு பிரச்சினைகளை ஓரளவுக்காவது முடிக்கும் சக்திகொண்டதாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். தீர்வின் வன்மை அதை அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது. பெண்ணின் தந்தையானவர் அகமண முறையை ஆழ்மனத்தில் வறட்டுத்தனப்படுத்திக் கொண்ட விதத்தின் வழியாக அவர் கொடுக்க நினைத்த 10 லட்சங்கள் என்பது உளவியல் அடுக்கில் குறிப்பிட்ட இனத்தின் பொருளாதார பலவீனம்.  இதன் ஆதி சரீரமாக சுதந்திரத்துக்குப் பிறகான முதல் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளின் அரசியல் செயல்பாடுகளைக்  கூறலாம்.
 
கிராம்சியின் 'பண்பாட்டு மேலாதிக்க அரசியல்' வரையறைகளில், அரசு இயந்திரங்களில் பெரிய பதவிகளில், தாழ்த்தப்பட்ட ஒரு மனிதனின் பங்கு என்பது இன்றியமையாததாக சொல்லப்பட்டுள்ளன. இவை முறையே இந்திய குணாம்சமடங்காத ஐரோப்பிய சோசலிசமென்ற தவறான புரிதலின் தொடச்சியால்  நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுள் உயர்குடி மக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதால் இங்கு செல்லுபடியின்றி தோல்வியைத் தழுவியது. கிராம்சியின் கருத்தாக்கம் மிக முக்கியமான அதிலும் இந்தியா போன்ற நாடுகளுக்குள் இயங்கியிருக்க வேண்டிய ஒன்று. ஆனால், பண்பாட்டு மேலாதிக்கம் எதிர்தளத்தில் அதனினும் சிறந்து இயங்கிற்று / இயங்கியும் வருகிறது.
 
ஒரு கூற்றுக்கு, இன்றைய தலித் வகுப்பில்  பெரும்பான்மையினர் மத்தியில் கலாச்சார மேலாதிக்கமும், பொருளாதார மேலாதிக்கமும் உருவாகியிருந்தால் பெரியாரின் செயல்பாடுகளுடைய தொடர்ச்சியாக அவை இருந்திருக்கலாம். இவை, சமீபத்திய மூன்று தலித் இளைஞர்களின் உயிர்காப்புப் பொருளாக மாறியிருக்க சாத்தியங்களுண்டு.
 
அதே மாதிரி, தற்போதைய நிகழ்வுக்குப் பின் பழிச்சொல்லாகவும், தூற்றுவது போலவும் 'ஆதிக்க சாதி' - யென பொதுமைப்படுத்தப்படும்  வரையறைக்குள் படுகொலை நிகழ்த்தும் சாதிகள் அடங்கிவிடாது. தனிப்பட்ட - குடும்ப வட்டத்திற்குள்ளிருந்து திட்டமிடப்படும் கொலைகள் என்பதற்கு மேலாக அதில் எதுவுமில்லை. தேசிய ரீதியாக அவர்களெல்லாம் எவ்வளவு தூரம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் முடிவுகளிலிருந்து அறியலாம். (பார்க்க: சாதி, வர்க்கம், மரபணு, பக்கம் -46). இதனோடு Dr. சந்தோஷ் கோயலின் ஆய்வுமுடிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனம் ஒடுக்கப்படுவது என்பது அதன் சமூக அந்தஸ்து, உடைமை பலம், பிறப்பாலான வகுப்புப்பிரிவு போன்ற பல காரணிகளால் அமையும். இதில் அம்பேத்காரும், பெரியாரும் தொட்ட இயங்குதளங்கள் கச்சித முழுமையடைதலை நோக்கி செல்லாவிட்டாலும் அவர்களுடைய தொடக்கம் சமூகப்புரிதலை அடுத்த தலைமுறையினருக்கு அளித்தது உண்மை.
 
ஏனெனில், இப்படிப்பட்ட கட்டுமானம் அடிவேரிலிருந்து ஏறி பல ஆண்டுகளாக மனித மனதில் ஆழமாகப் பதிந்தவை. வேரோடு சாய்ப்போம், மாய்ப்போம் என்பதெல்லாம் நிஜப் புரட்சியாளர்களாலேயே இயலாத காரியம். சமகாலத்தில் அய்யன் காளி, சியாம் சுந்தர், பெரியார் போன்றோருடைய கூட்டுச் செயல்பாடுகள்தான் சாதீயப்பிடி மக்களிடையே நழுவ சட்டமியற்றிருக்கும். அப்படியான வழித்தோன்றல்கள் உருவாகாத நிலமாக இந்திய சமூகம் வாழ்ந்ததால் அதை அழிப்பதும், ஒழிப்பதும் கடினம்.
 
இன்றைக்கு சினிமா வளர்ந்த விதத்தில் சாதீயத்துக்கும் பங்கு உண்டு. அதற்கு முழுமையான சாதீய சுதந்திரத்தை சினிமாக்கதைகளில் பின்பற்றியதே காரணம். அவ்வாறு ஒருமுகப்பட்ட  சார்பு கொள்கைகளின்  சந்தர்ப்பங்களினால் கூட, சினிமாவில் சாதீய சுதந்திரம் மலிந்து காணப்படுவதில் ஆச்சர்யமில்லை. ஒப்புக்கு இதை சொல்கிறேன்.  ஒரு குடிசைவாழ் பெண்மணியைப் பிடிக்க வடிவேலு குழாம் திட்டமிடும். அங்கு சென்றவுடன் அவள் கூறுகின்ற வசைமொழியால் திக்கித் திணறுவர். முதலில் ஒரு போலீசை அனுப்புவார்கள். அவர் பேயறைந்ததுபோல் வரவும் வடிவேலுவே செல்வார். குடிசைக்குள் அந்தப் பெண்மணி அம்மணமாக நிற்பதைப் பார்த்தவுடன் பிடிப்பதுபோன்று பாவலா செய்து அவளது  அம்மணத்தை நின்று  ரசிப்பதால் அந்தப் பெண் குடிசையின் பின்பக்கமாக ஓடிவிடுவாள்.
 
ஒரு பார்வையில் இதுதான் இன்றைய போலீசுகளின் முகம் என்று நகைச்சுவையோடு இவர்கள் வற்புறுத்த முயற்சிசெய்தாலும், வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளப்படும் பிராந்தியம் அடித்தட்டு சாதியைச் சேர்ந்த மக்களின் வாழ் நிலமாக உள்ளது.
 
நமக்கு சினிமா அறிமுகமாகுகையில் தெய்வபக்தியே மேலோங்கி நின்றது. நாள்தோறும் வீடுகளில் இறுக்கமான சமய மரபுகளைப் பேணிக் காத்து வருவதே அப்போதைய சினிமாக்களின் கடமையாக இருந்தன.  (ஸ்ரீவள்ளி, சிந்தாமணி போல) பின்பு, தத்துவங்களும், மன்னர்களும் அவ்விடத்தைப் பிடித்தனர். [தூக்கு தூக்கி, மருத நாட்டு இளவரசி போல] அதற்கும் பின்பாக, ஜனரஞ்சக இந்தி சினிமாவின் தாக்கத்தால் பல வர்ணங்கள் திரையில் ஜொலித்து கண்களை ஆய்ந்தன. இதன் பின்னரே சாதி அடிப்படையிலான படங்கள் உள்வந்தன.
 
அவையனைத்தும் பண வசதியாலும், பூரண அந்தஸ்தினாலும் ஏற்றமடைந்த வகுப்பு மக்களைப் பெருமைப்படுத்துவதாகவே அமைந்தன. அவையும் நேர்த்தியற்ற, லாபமிக்க அரசியல் தன்மை பெற்றவை.  இக்கட்டத்தில் வெளிவந்த, ஒருசில தமிழ்ப்படங்களில் மட்டும் தட்டையான முற்போக்கு அம்சங்கள் பேசப்பட்டன.
 
இதே காலகட்டத்தில் வேறு சில இந்தியப்படங்கள் தலித் மக்களின் வாழ்வியலை நேர்மையோடும், நுட்பமாகவும் பேசிற்று. (சாஜி.என்.கருணின் வானப்பிரஸ்தம்,சத்யஜித் ரே-யின் சத்கதி, ஷ்யாம் பெனகலின் அங்கூர்,  மிருணாள் சென்னின் காஹ்ரிஜ், பி.வி.காரந்தின் சோமன துதி போன்ற மகத்தான படங்களும் வெளிவந்துகொண்டுதான் இருந்தன)
 
பொதுசனத் திரளில் வலிமையான பிம்பத்தை உருவாக்குவதினால், சினிமாக்கள் எப்போதும் மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டியவை. கதைகளில் அதி உணர்வுபூர்வமான கருத்தாக்கங்களைச் சேர்ப்பதில் முற்போக்கு அரசியல் தெளிவும், நேர்மையையும் கடைபிடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே இயங்குவது சிறப்பாக அமையும். ஆனால், மனிதப் பிரிவினை சார்ந்த சிக்கலான கருத்தியல்கள்  கொண்ட கதைகளை சினிமாவாக எடுக்கும்பொழுது வணிக நோக்கிற்காகவும், தெளிவற்றும் மேலும் வகுப்புவாத பிரிவினையை வளர்க்கும் முயற்சியை மட்டுமே மேற்கொள்கிறார்கள்.
 
பொதுவாக இத்தகைய சினிமா என்பது கதையாடல்களின் தொகுப்பு என்பதால் இக்கதையாடல்களைப் பிரதிபலிப்பதில் மாற்றங்கள் கொண்டுவருவதை குறியியக்க கோட்பாடுகள் கொண்டு விளக்கலாம். குறியியக்கத்திலுள்ள   பிரதிமம், தொன்மம், சின்னம் இவற்றில் முக்கியமானதாக பிரதிமமே மேலோங்கி நிற்கிறது. மற்ற இரண்டும் எல்லா தளங்களிலும் நிலைக்காத பட்சத்தில் அதன் இருப்பின்மை பிரதிமத்தை பாதிக்காது என்பதன் அடிப்படையில் சாதியின் குறியியக்க கூட்டுருவாக்கம் செயல்படுகின்றது.

பிரதிமத் தத்துவம் கதையாடல்களை முன் வைத்து நகர்கிறது. அந்தந்த தெய்வங்களுள், அது குறிக்கும் சாதிகள் அடங்கியிருப்பதாலும், அத்தெய்வங்கள் வைத்திருக்கும் தொல்கதைகளின் மறுகட்டமைப்பினாலும் சாதீய உணர்வு குறைக்க வழிப்படுத்தலாம் என்பது பிரதிமத்தின் கருத்து.
 
புரிதலுக்காக - திருப்பாணாழ்வார் என்பவர் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் தாழ்த்தப்பட்ட இனமாக கருதப்படுகின்றது. தாழ்ந்த சாதியில் பிறந்ததால் அவர் ஒதுக்கிவைக்கப்படவில்லை. மாறாக அவர் ஏற்றுக்கொண்ட பக்தி இயக்கம் அவரை முன்னிறுத்தி வணங்கிற்று. மிஷனரி செயல்பாடென்ற ஒற்றைப் பரிமாணத்தை மீறி  இது குறிக்கும் வரலாற்றுப்பார்வையை கவனிக்க வேண்டும்.
 
பாணர் குலம் இசைக்குப் பேர் போனது. ஆழ்வார் ஆகும் முன் அவர் இசை இசைத்து வாழ்வு நடத்தியவர். பக்தி மார்க்கம் தழுவியதன் மூலம்  அவர் தன் கீழ்சாதியிலிருந்து உயர்ந்துவிட்டார் என்று மத விற்பன்னர்களால் இன்று சொல்லப்படும் கூற்று  உவப்பானதல்ல.  ஒரு சிறந்த இசைக் கலைஞனின் தோற்றமே அவருடைய வளர்ப்பினால் குறிக்கப்பட்ட அடையாளத்தை மேன்மை செய்வதாக புரிந்துகொள்ளல் வேண்டும். இதற்கு எதிர்மறையாக  உயர் குலத்தில் பிறந்த ஒருவர் குற்றவாளியாகும்போது தன் பிறப்படையாளத்தை விட்டு பெரியவர்களால் வளர்க்கப்பட்டதை எண்ணும்போது சாதி அடையாளம் இரண்டு அல்லது மூன்றாம்பட்சத்திற்குத் தள்ளப்படுவதாக பிரதிம விளக்கங்கள் கூறுகின்றன.
 
இதனால், தன் குலத்தை எண்ணி தாழ்மையுணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் திருப்பாணாழ்வாருக்கு இல்லை எனவும் அல்லது இசை மேதைமையை ஆணவத்திற்குள் கொண்டு வராமல் இருப்பதாகவும், குற்றவாளியின் பூர்வீக வளர்ப்புப்பார்வை சமூக கூட்டுமனம் உணர வழிசெய்தலே சாதீயம் உதிர்தலின் ஆரம்ப நிலை.
 
இதே போக்கு வீரன் சுந்தரலிங்கம், இமானுவேல் சேகரன் போன்றவர்களிடம் பிற்காலத்தில் உருவாக்கலாம்.
 
தற்போதைய நிலவரப்படி சுவடில்லா சாதீயத்தின் சாத்தியங்கள் குறைவு. சாதீயம் இருக்கும். அதன் அடையாளங்களும் நம்மிடையில் உலவும். தவிர வன்முறைப்படுத்தப்படத் தேவையான உணர்வுப் பெருக்கின் வீச்சில் மாற்றங்கள் ஏற்படலாம். இதுவே சாதீய அழிவின் தொடக்க நிலையாக இருக்கும்.
 
சாதி ஒழிப்பு மிக நீண்ட செயல்பாடு என்பதால் (Very long process) அதன் ஆரம்பத்திலிருந்து மக்களிடையே  கலை உணர்வை அதிகரிப்பது முக்கியமான ஒன்று. அதிகரிக்க வேண்டுமென்பதைவிட அதற்கான இயங்குவெளியும் , பிறப்பின் மூலமான அடையாளப் புரிதலாவதை சிறு வயதில் விவரமேற்படும் பருவத்திலிருந்தே  சாதீய அலகுகளின் அடிப்படையற்று  குழந்தைகளை வளர்ப்பதும்  முக்கியமானது.
 
கலை என்றால் மொத்தமும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் அகப்புரிதலுக்கு ஏற்றவொன்றாக இருப்பதற்காக அதை சம்பாத்திய அடிப்படையில் ஏற்படுத்தும் நிலையை வலியுறுத்துவது. காரணம், கிரிக்கெட்டில் சோபிக்கும் நிலை வரை செல்வது நடுத்தர , அடித்தட்டு யதார்த்ததுக்கு ஒவ்வாததால் வேறொரு மாற்று இயக்கம் நோக்கி துணிபு கொள்வது தமிழ்ச்சமூகத்தின்  கட்டுமானப்படி அவை பொருளாதாரத்தின் நிறைவை ஒட்டியே தீர்மானிப்பதாக அமையும். சொன்னபடி , கவிதை எழுதுதலும், ஓவியம் வரைதலும் மட்டுமல்ல இங்கு சொல்லப்படும் கலை. டி.வி. பெட்டியை சரி பார்ப்பதும், மர வேலைக்குள் நாட்டமிருப்பதும்கூட கலைச்செயல்பாடுகளே.  அவை பொருளீட்டின் பொருட்டு முழுமையாக வரும் பொழுது சிக்கலான பல கண்ணிகள் கொண்ட இந்திய உளவியலுக்கு உகந்த கலைச் செயல்பாடுகள் என அர்த்தப்படும்.   மார்க்சிய அடிப்படைகளோடு கூடிய கல்விப்  புலம்  பரவலாக நிகழுகையில் மேற்கூறிய செயல்களில் ஏற்றம் (Improvement) அமையும்.
 
சாதி வாரியான தொழில்களில் கூலிப் பட்டுவாடாவில் நெருக்கடி என்பது காலங்காலமான ஒன்று. ஆனால் கூலி அடிப்படையிலான  பொருளீட்டில் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. (உ-ம்) தெற்கில் பள்ளர் இனத்தினர் நடுகைச் சடங்குகளில் ஈடுபடுகிறார்கள். நடுகை நிகழ்வு தொழில் என்பதை மீறிய பொழுது கழிப்பாக உள்ளது. அதில்,  அவர்களிடையேயான நடுகைக் குழுக்களில் இருக்கும் மதினி முறை குழுக்களை விட பணம் சேர்க்கும் தாய், மகள் குழுக்கள் குறைவு; உடல் சம்பந்தப்பட்ட நிகழ்வென்பதாலும் அதன் சொற்ப வருவாய் பெருத்த மாற்றங்கள் கொணராதென்பதாலும் இவற்றை எதிர்மறைக்குள் செலுத்த இயலாது எனினும் சமகால கீழ்வகுப்பு பொருளாதாரத்தின்படி இக்குழுக்களுக்குள்ளும் பெருக்கம் அவசியப்படுகிறது. முதலீட்டிய நெருக்கடி அவசியம்  என்பதை மீறி அவர்களின் கூலிப் பட்டுவாடாவில்  பெரிய மாற்றங்கள் தராமல் போனாலும் ஒரு வகையில் பொருளாதார சமநிலைக்கு உதவலாம்.
 
நடுகை நிகழ்வுக்கு முன்பு நடுகை சடங்கில் நிலத்தின் வடகிழக்கில் நடைபெறும் நாற்றுப்பயிர்களின் திருமண முறைகளில் கடைசியாக பாலியல் சொற்களால் ஒருவரையொருவர் வசை பாடும் நிகழ்வு நடக்கும். முதலாளித்துவ பேருக்கு அதிக போகம் தர வேண்டும் என்றாலும்கூட அவை சாதீயத்தின் அடையாளங்களாக அடித்தளங்களில் படிந்துள்ளன. அவை பார்வைக்குப் படாதிருத்தலே சமூக அவலம்தான்...
 
தலித் இனக்குழுக்களில் மார்க்சிய அடித்தள கருத்தியல்களுக்கு வலுசேர்க்கும்பொழுது தலித் மக்களின் பொருளீட்டு முறையில் நிகழும் மாற்றங்கள் இனப்படுகொலைகளையும் இன்னபிறவற்றையும் தவிர்க்குமென்றால் பொதுவான கல்வியியலிலிருந்துதான் அது துவங்கும். அதற்குரிய பாரிய மாற்றங்கள் ஏதும் நிகழாதுபோகும் ஆகச்சிறந்த சூழலில் இக்கட்டுரை வனையப்படுகிறது.
 
---------------*****---------------
 
உதவிய நூல்கள் :
 
அல்தூசரின் சித்தாந்தம் - இன்னும் சில கட்டுரைகள் - வெங்கடேசன் 
சாதியில் குறியியக்கம் - கட்டுரை - ராஜன் குறை .
இஸ்லாம் - மார்க்சியம் - கட்டுரை - ஹெச்.ஜி.ரசூல்.
சாதி , வர்க்கம், மரபணு - ப.கு.ராஜன்.