Pages

Tuesday, December 17, 2019


கைகளின்
பாழடைந்த ரேகை 
ரத்தம் 
பிணச்சாம்பல் 
அருள் மாடம் 

கலங்கிய நிறவெளிக்குள் 
ஆகாயம் 
கீறல்களாய் மழைக்கோடு
கேவல் ஒலிர்க்கும் 
நீள மின்னல்
கூதலில் நடுங்கி
மேகம் கலைந்து
தோற்றம் பால் வெளி
சாமி மாதிரி
கருவறையெங்கும் 
அருவச்சுரோனிதம் 
தாயாரவள்
சுடர் தீவிளக்கு
கருத்து மின்னும் 
அம்பாளே என்பார் சிலர்
கழுத்து உடைந்த
சிலை
எச்சமிடும் பறவையின்
புராதன வாசனை 
பாடிய பாணன் 
உண்ணும் உமிழ்நீர்
பண்டாரப் பிச்சை
களைத்த கால்கள்
பூசை 
புகை
பித்தில் பூதேவி
பரண் மேல்
போதைப் பிரக்ஞை
பறை வெடித்துப்
புவி உதிர  
பேதையே உயிராகி
ஊன் விழுங்கிய சுக்கிலம் 
தோற்று 
புரியாத மனவொலி 
பிதற்றும் மனோபாஷை 
ஒருவனுக்குள் 
அத்தெய்வம் 
புக 
புக
உள்ளுள் உள் 
உன்மத்தம் 
அதற்குள்
ஒருவன்
அவனுக்குள் 
இவன்
இவன் என்பதோர்
அவன்
அவனே யான்
யான்
என்
சித்தம்
ரணம் 
அவள் 

#################

உன் முகத்தால் 
ஆனது 
அமைதி 

மலைக்கிராமத்தில் 
தேவாலயம் 
வசிக்கிறது 

உச்சி வெய்யிலின் 
கீழ்
பாசிகளாலான
பழைய கோயில்

எங்கள் கிராமத்தில் 
குட்டிக் குட்டிப் பிறைக் கூம்பின் 
வழி கசியும் 
இறைவனின் பள்ளியும்தான் 
அது

மேலும் 
அவ்வமைதி 

போர்களைக்
கூத்தாக்கி 
இரவெங்கும் 
கேலி செய்வது

பிணங்களை
உந்தியின் 
நீரசைவுக்குள் திரும்பவும் 
நீந்தவிடுவது 

பிறழ்வை 
கொஞ்சம் நேர்படுத்திப்
பார்ப்பது

கடினமான 
உடலிலிருந்து 
கடினமற்ற
மனதை
உதறி இழுப்பது 

###################




என்றும்
எக்கணமும்
எச்சூழலிலும்
எந்த இடத்தில் நான் உறங்கினாலும்
எப்படிப்பட்ட பயணக்களைப்பிலும்
பகல் நேரத்திலும்
வந்த 
கனவுகளில்
புணர்தலின் நிமித்தமாய்
அவள் 
வருகை 
நிகழ்ந்ததில்லை

கனவெனும் 
அப்பாற்பட்ட நிலத்தில்
ஒளிரும்
பிரக்ஞைச்சுடர்

##############

மலை
அதீத குளிர்மையை 
என்றால்
தகிக்கும் அனலில் 
மரம் நிழலைப் பெயர்த்து
நிலவு ஒளியை உருவி
மழை தன் ஈரத்தை உறிஞ்சி 
ஆகாயம்
நீலத்தை ஒழுகவிட்டு 
அவள் சவம் குளிர் சாதனப் பெட்டியில் இன்னும் 
இன்னும் 
வாழ்ந்துவிட

நீர்மையின் அன்பு
இப்பூதங்களின் பேய்த்தன்மை.

########

ஈசலின்
நிச்சயமற்ற 
பறத்தல்
எனக்குள்
நின்றிருக்கும் 
நீ
உடனான
என் சந்திப்பு.

###########

உன்னை 
உடலாக நான் 
கண்டதில்லை 
மனமாகவே
காண்கிறேன்

##########

ஏதோ சொல்ல 
வேண்டும் 
ஆனால் 
சொல் என்பதே
நிராதரவாக
நிற்க 

############


அவளது
நிழல் 
என் 
பூத உடல்

#########


அன்பை
வீசி அடிக்கும் 
மழையைப் போல
சூறலிடுகிறேன் 

யோசித்தால் 
அதன்
ஈரத்தைக்கூட 
உன்னிடம் 
நான்
உணரவில்லை 

இருள் 
என்றால் 
பார்வையற்றவர்
கைகளால் 
தேடும் 
வெளிச்சம்

பின்னந்தலையை
யாரோ இழுத்து 
நீர்ச்சுழல் 
வழி படித்துறையில்
அலறுவதே
நதி

வந்து பின் செல்லும்
அலைகள்
சிறுமியை 
மேலும் மேலும்
கரைமணலில் ஒதுக்க 
வேடிக்கைப் பார்க்கும்
கடலாக

அன்பு
என்னிடம் எப்பொழுதும் 
அனாதையாகவே 
கிடக்கிறது

நாதியற்ற
அசட்டையாக ஓடி
சாலையில் நசுங்கும் 
நாயாகவே 
உள்ளது




No comments:

Post a Comment